இரகசியமாக கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் - அரசாங்கம் தன் நலனுக்காகவே செயல்படுகிறது..! சஜித் சீற்றம்
அரசாங்கம் வரிக்கு மேல் வரி விதிப்பதன் மூலம் மக்களை கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும், அதைத் தாங்க முடியாத அளவுக்கு மக்கள் மாறிவிட்டனர் எனவும், இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் அரசாங்கம் தன் நலனுக்காகவே செயல்படுகிறது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
மக்களால் இழப்பீடு வழங்க முடியாது

தொடர்ந்து கருத்துரைத்த அவர், " இந்த வரிகளைப் பயன்படுத்தி அமைச்சர்களுக்கு நிவாரணம் வழங்கவும், கடந்த சில நாட்களுக்கு முன்னர், பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நட்ட ஈடு வழங்கவுமே இது முன்னெடுக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும், இரகசியமாக கைச்சாத்திடப்படும் ஒப்பந்தங்களுக்கு நாட்டு மக்களால் இழப்பீடு வழங்க முடியாது.
முன்னாள் அதிபர் தலைமையிலான அரசாங்கம் தனிப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் கைகோர்த்து செயற்பட்டதாலேயே தோல்வியடைந்தது, இன்றும் அவ்வாறே நடந்து வருகிறது", எனக் குறிப்பிட்டார்.