மக்களின் உயிர்களைப் பணயம் வைத்துள்ள சிறிலங்கா அரசாங்கம்! சஜித் குற்றச்சாட்டு
கடந்த தினங்களில் தரமற்ற எரிவாயு நிரப்பப்பட்ட கப்பல்கள் இரண்டு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தரமற்ற எரிவாயுவை இறக்குமதி செய்து சந்தைக்கு விநியோகிக் வேண்டாம் என தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அறிவித்திருந்த போதிலும் குறித்த எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) குற்றம் சாட்டியுள்ளார்.
லுணுகம்வெஹர பெரலஹெல பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடிப்புக்கு உள்ளாகி ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
தரமற்ற எரிவாயுவை சந்தைக்கு விநியோகித்து மக்களின் உயிர்களை பணயம் வைத்து அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்ற இந்த செயற்பாடானது பாவமான மிகப் பெரிய அநியாயகரமான செயற்பாடு.
நாடு முழுவதும் இடம்பெறுகின்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தினால் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ள அப்பாவி மக்களுக்கு நஷ்ட ஈட்டையேனும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இது வரையும் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களினால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இவை அனைத்துக்கும் அரசாங்கமே பொறுப்புக்ககூற வேண்டும் என்றும் தெரிவித்தார்.