இந்திய பணியாளர்கள் கொண்ட கப்பலை தாக்கிய அமெரிக்கா! கிளம்பியுள்ள கடும் எதிர்ப்பு
ஈரானிய துறைமுகங்களுக்கான அமெரிக்காவின் முற்றுகையை மீறிச் செல்ல முயன்றதாகக் கூறி, ஓமன் கடற்கரைக்கு அப்பால் இந்தியப் பணியாளர்களைக் கொண்ட எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
பலாவ் நாட்டின் கொடியுடன் பயணித்த 'எம்/டி செட்டபெல்லோ' (M/T Settebello) என்ற அந்த எண்ணெய் கப்பலில் மொத்தம் 24 இந்திய ஊழியர்கள் இருந்துள்ளனர்.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அவர்களில் மூன்று பேரைக் காணவில்லை என்றும், மீதமுள்ள 21 ஊழியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்க தாக்குதல்
தற்பொழுது ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம், உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் உத்தரவுகளுக்குக் கப்பல் ஊழியர்கள் பணியத் தவறியதால், அமெரிக்க விமானம் ஒன்று கப்பலின் இயந்திர அறையை இலக்கு வைத்துத் துல்லியமான ஆயுதங்களால் தாக்கி, கப்பலைச் செயலிழக்கச் செய்ததாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதுவரை வரவழைத்து இந்தியா எதிர்ப்பு
கடந்த ஏப்ரல் 13 அன்று ஈரானிய எண்ணெய் போக்குவரத்துக்கு எதிராக இந்த முற்றுகை நடவடிக்கை தொடங்கப்பட்டதில் இருந்து, அமெரிக்கப் படைகளால் செயலிழக்கச் செய்யப்படும் எட்டாவது கப்பல் இதுவாகும்.

இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், இப்பிராந்தியத்தில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்படுவதற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், புது டில்லியில் உள்ள அமெரிக்காவின் உயர்மட்டத் தூதுவர் ஜேசன் மீக்ஸை நேரில் வரவழைத்து இந்தியா தனது இராஜதந்திர எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 9 மணி நேரம் முன்