ஒபரேசன் சிந்தூரை தொடர்ந்து இந்தியாவின் மற்றுமொரு அதிரடி
ஒபரேசன் சிந்தூரின் விளைவாக, இந்திய இராணுவத்துக்கு புதிய ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளை வாங்குவதற்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
2014 முதல் நரேந்திர மோடி (Narendra Modi) நிர்வாகத்தின் முக்கிய கவனம் பாதுகாப்புத் துறையாக இருந்து வருகிற நிலையில், தற்போது துணை வரவு செலவுத் திட்டத்தின் மூலம், ரூ.50,000 கோடி கூடுதலாக ஒதுக்குவதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அதற்கான ஒப்புதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பெறப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் மூலம், ஆயுதப்படைகளின் தேவைகள், அத்தியாவசிய கொள்முதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவுகள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்ட நிதி
இந்த ஆண்டு, மத்திய வரவு செலவு திட்டத்தின் மூலம் பாதுகாப்புத் துறைக்காக ரூ.6.81 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இது முந்தைய நிதியாண்டை விட 9.53% அதிகமாகும்.
இந்தியாவில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறைக்கான வரவுசெலவு திட்டம் சுமார் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
2014-15 ஆம் ஆண்டில், பாதுகாப்புத் துறைக்கான வரவுசெலவு ரூ.2.29 லட்சம் கோடியாக இருந்தது. அதுவே இந்த ஆண்டு, ரூ.6.81 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இது மொத்த வரவுசெலவு திட்டத்தில் 13.45% ஆகும்.
ஒபரேஷன் சிந்தூர்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஒன்பது பயங்கரவாத முகாம்களை அழித்த இந்தியாவின் ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களின் அதிரடி பாய்ச்சலை உலகத்திற்கு காட்டியது.
ஒபரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பின்னர் மே 12 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில், “இந்த நடவடிக்கையின் போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் நம்பகத்தன்மை உறுதியாக நிரூபிக்கப்பட்டது.
21ம் நூற்றாண்டின் போரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கான நேரம் வந்துவிட்டது என்பதை உலகம் இப்போது அங்கீகரிக்கிறது.” என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
