இந்தியா பிணங்களின் மைதானமாக இருக்கின்றது - திஸ்ஸ குட்டி ஆராச்சி
நாம் இந்தியாவிடம் தொடர்பு கொண்டு உதவி கேட்டோம். ஆனால் தற்போது இந்தியா பிணங்களின் மைதானமாக இருக்கின்றது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி (tissa kutti arachchi ) தெரிவித்துள்ளார்.
ஹப்புத்தளையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
"அன்று போர் நடைபெற்ற காலத்தில் உலக தொற்று நோய் இருக்கவில்லை என்பதால், சீனா, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் உதவிகள் கிடைத்தன. எனினும் தற்போது ஏற்பட்டுள்ள உலக தொற்று நோய் காரணமாக அந்நாடுகள் இலங்கையை விட பிரச்சினையான நிலைமையில் இருக்கின்றன.
தற்போதுள்ள ஏற்பட்டுள்ள பெரிய பிரச்சினைகளில் முதலாவது சமையலறை யுத்தம். வெங்காயம் இலாபமா, பீ. வெங்காயம் என்பவற்றை சாப்பிட்டீர்களா, பருப்பு சாப்பிட்டீர்களா, மின்சாரம் துண்டிக்கப்படுகிறதா என எமது பிரதமர் கடந்த காலத்தில் கூறியிருந்தார்.
இதனை தற்போது மறுபக்கம் மாற்றி வெங்காயம் சாப்பிட்டீர்களா? சீனி இருக்கின்றதா? எரிவாயு வரிசையில் நிற்கிறீர்களா? என கேட்கின்றனர்.
அன்று யுத்தத்தை நடத்திக்கொண்டு, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது, இப்படியான உலக தொற்று நோய் நிலைமை இருக்கவில்லை. அப்போது நாம் அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் தொடர்பு கொண்டு உதவி கேட்ட போது அந்நாடு உதவின.
ஐரோப்பிய நாடுகளும் உதவின. தற்போது இந்தியாவிடம் கேட்டோம். இந்தியா பிணங்களின் மைதானமாக இருக்கின்றது.
சீனா எமது நாட்டை விட கஷ்டமான நிலைமையில் இருக்கின்றது. அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளிலும் கஷ்டமான நிலைமை. அவர்களின் பிரச்சினைகளை தீர்க்காமல், அவர்களால் எமக்கு உதவ முடியுமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.