ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியாக கருதப்படும் ரவிச்சந்திரன் தொடர்பில் நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுட்தண்டனை அனுபவித்துவரும் ரவிச்சந்திரனுக்கு சிறைவிடுப்பு வழங்குவதில் என்ன தடை இருக்கிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுட் தண்டனை அனுபவித்துவரும் ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி 3 மாத காலம் சிறைவிடுப்பு கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். எனினும் ரவிச்சந்திரன் மத்திய அரசின் செயல் அதிகாரத்துக்கு உட்பட்ட சட்டப்பிரிவின் கீழ் தண்டனை பெற்றுள்ளதால் அவருக்கு சாதாரண விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய முடியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சிறைவிடுப்பு கோரிக்கையை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டிருந்த நிலையில், ரவிச்சந்திரனுக்கு 2 மாத கால சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என தாயார் ராஜேஸ்வரி மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது அரசு தரப்பில் இது குறித்து பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இந்த வழக்கின் குற்றவாளியான பேரறிவாளனுக்கு சிறைவிடுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் ரவிச்சந்திரனுக்கு விடுப்பு வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் இது குறித்து அரசிடம் உரிய தகவல் பெற்று மன்றுக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர். இந்த வழக்கில் 27 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் மகன் ரவிச்சந்திரன் இருப்பதாக தனது மனுவில் கூறியுள்ள ராஜேஸ்வரி , பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் அடிப்படையில் தமிழக அரசின் அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனவும் இந்த தீர்மானம் தமிழக ஆளுநரின் ஒப்புதல் பெறுவதற்காக தொடர்ந்து காத்திருப்பில் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.