2030 ம் ஆண்டுக்குள் ஏற்றுமதியில் உச்சம் தொடவுள்ள இந்தியா..!
வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தும் நோக்குடன் இந்தியாவின் மத்திய ஆடைத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான அரச பிரதிநிதிகள் குழு 10 நாட்களாக பல்வேறு நாடுகளுக்கு பயணித்துள்ளது.
இதில் திருப்பூரை சேர்ந்த இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டமைப்பின் (பியோ) தலைவர் சக்திவேலும் பங்கேற்றிருந்தார்.
கலந்துரையாடல்கள்
பிரான்ஸ் உச்சி மாநாடு, இந்தியா- இத்தாலி வர்த்தக கலந்துரையாடல், ஐரோப்பா மற்றும் இந்தோ - பசிபிக் அமர்வு, இந்தியா - இத்தாலி தலைமை நிர்வாகிகளின் கலந்துரையாடல், கனடாவில் நடந்த வரியில்லா வர்த்தக ஒப்பந்த ஆலோசனை, நியூயார்க்கில் நடந்த வட்டமேசை மாநாடு, தென்கிழக்கு அமெரிக்காவில் நடந்த 'பாஸ்ட்னர்ஸ்' கண்காட்சி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இக் குழுவினர் பல்வேறு வர்த்தக கூட்டமைப்பினர் மற்றும் அரச பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
ஏற்றுமதி
இது தொடர்பில் 'பியோ' தலைவர் சக்திவேல்,
"இந்திய தொழில்துறைக்கு, உலகம் முழுவதும் பிரகாசமான எதிர்காலம் உருவாகும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
கோவிட் தொற்றிற்கு பிறகு உலகளாவிய புவிசார் அரசியல் மற்றும் வளர்ந்து வரும் நிலையில், சவால்களை எதிர்கொள்ள பல்வேறு நாடுகளும் இந்தியாவுடன் கரம்கோர்க்க முன்வந்துள்ளன.
பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி கிடைத்துள்ளது.
எதிர்வரும் 2030 ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஏற்றுமதி 3 மடங்கு உயருமென நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா எண்ணற்ற உற்பத்தி திறனை கொண்டுள்ளதாக வளர்ந்த நாடுகள் பாராட்டியுள்ளன.
இந்தியா-கனடாவுக்கு இடையில் வரியில்லாத ஒப்பந்தம் உருவாக சிறப்பு முயற்சி எடுத்துள்ளோம்.
இந்தியாவின் தரம் மற்றும் சேவை மதிப்பை பாராட்டும் வகையில், சீனாவுக்கான கனடாவின் ஏற்றுமதி ஒப்பந்தங்கள் இந்தியாவை நோக்கி திரும்பலாம்.
தொழில் முறை வர்த்தக மேம்பாட்டு பயணமானது இந்திய தொழில் துறைக்கு மேலும் வளர்ச்சி வாய்ப்புகளை அதிகம் ஏற்படுத்தியுள்ளது." எனக் கூறியுள்ளார்.
