சீனா, பாகிஸ்தான் பதற்றத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நகரும் இந்திய திட்டம்
இந்தியா 2026- 27 நிதியாண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புக்கு என 7.85 டிரில்லியன் ரூபாயாக அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 15.19 சதவீதம் அதிகமாகும். மத்திய அரசின் மொத்த செலவில் 14.67 சதவீதம் பாதுகாப்புத் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்வு, சீனா மற்றும் பாகிஸ்தானுடன் அதிகரித்து வரும் பதற்ற நிலையை முன்னிட்டு எடுக்கப்பட்ட முக்கிய முடிவாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட ஆயுத மோதலின் பின்னர், இராணுவத்தின் தயார்நிலை மற்றும் உபகரண குறைபாடுகளை சரிசெய்யும் நோக்கில் இந்த நிதி அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
மூலதனச் செலவு
மொத்த வரவு செலவு திட்டத்தில் 2.19 டிரில்லியன் ரூபாய் மூலதனச் செலவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 21.8 சதவீதம் அதிகம்.

இந்த தொகை புதிய போர் விமானங்கள், நவீன ஆயுத அமைப்புகள், போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ட்ரோன்கள் வாங்க பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய விமானப்படையின் போர் விமான படையணி எண்ணிக்கை குறைந்து வருவது கவலைக்குரியதாக உள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்றில் விவரிக்கப்பட்டுள்ளது.
இதனை சமாளிக்க 114 புதிய போர் விமானங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் விமானம் முக்கிய போட்டியாளராக கருதப்படுகிறது.
அதேசமயம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரிக்கும் தேஜஸ் விமானங்களுக்கும் அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது.
1.1 டிரில்லியன்
2021 மற்றும் 2025 ஆண்டுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 1.1 டிரில்லியன் ரூபாயாகும்.
ரஷ்யாவிடமிருந்து 5.43 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் வாங்கப்பட்ட எஸ் - 400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளுக்கான கட்டணங்களும் தொடர்ச்சியாக செலுத்தப்படுகின்றன.
இதேவேளை, பாகிஸ்தான் தனது பாதுகாப்பு செலவை 20 சதவீதம் உயர்த்தி 9 பில்லியன் டொலராக அறிவித்துள்ளது. 2020-2024 காலப்பகுதியில் பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதிகளில் 81 சதவீதம் சீனாவிலிருந்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா தனது 2025 பாதுகாப்பு செலவை 249 பில்லியன் டொலராக உயர்த்தியுள்ளது. நிபுணர்கள் கருத்துப்படி, சீனாவுடன் செலவினத்தில் போட்டியிடுவது இந்தியாவுக்கு சாத்தியமற்றது.
எனினும், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் திட்டமிட்ட முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதே நேரத்தில், அதிகப்படியான ராணுவ செலவு மற்றும் சமூக நலத் திட்டங்கள் ஆகியவற்றுக்கிடையில் சமநிலையை பேணுவது அவசியம் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |