ஸ்ரீலங்கா இராணுவத்தால் தமிழகத்துக்கு பேராபத்து- முன்னெச்சரிக்கை விடுத்த பிரமுகர்!
கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்துடன் ஸ்ரீலங்கா இராணுவம் இணைந்து செயற்படுவதால் தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் என அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் இராணுவத்தின் 28 அதிகாரிகள், 725 படை வீரர்கள் கொண்ட 3 குழுக்களை உருவாக்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்திய விவசாயத்தில் கால்பதித்து இந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் குழு முதலீடுகளை மேற்கொள்ள மறைமுக முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
தென்னிந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதுவராக நியமனம் பெற்றுள்ள வெங்கடேஷ்வரன் இந்த விடயத்தில் முன்னின்று செயற்படுவதாக பி.ஆர்.பாண்டியன் குறிப்பிட்டுள்ளார். திருச்சி உள்ளிட்ட பகுதியில் உள்ள கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்தின் பங்குகளை ஸ்ரீலங்கா சார்ந்த முக்கிய தலைவர்களுக்கு வாங்குவதற்கான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தின் மையப் பகுதியாக உள்ள திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாய காணிகள், தொழில் மற்றும் சர்க்கரை ஆலைகள், உர உற்பத்தி நிறுவனங்களை நடத்தி வரும் கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்துடன், ஸ்ரீலங்கா இராணுவம் கூட்டிணைவதால் எதிர்காலத்தில் தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, தமிழகத்தின் நலன், மற்றும் பாதுகாப்பு கருதி தமிழக முதல்வர், வெங்கடேஷை அழைத்து உரிய விளக்கம் கேட்க வேண்டுமெனவும், கோத்தாரி நிறுவனத்தையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் எனவும் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ அரசாங்கத்தின் அனுமதியின்றி கோத்தாரி நிறுவனம் ஸ்ரீலங்கா இராணுவத்துடன் ஒப்பந்தம் செய்து, பங்குகளையும் விற்பனை செய்திருந்தால், அதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.