நடுக்கடலில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழக கடற்றொழிலாளி - இந்திய கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்கு!
தமிழக கடற்தொழிலாளி மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழக கடற்தொழிலாளர் மீது இந்திய கடற்படையினர் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்கால் பகுதியில் இருந்து கடந்த 15ஆம் திகதி செல்வம் என்பவருக்கு சொந்தமான ஆழ்கடல் மீன்பிடி படகில் 10 பேர் மீன் பிடிக்க சென்றனர்.
இவர்கள் குறிப்பிட்ட நாட்கள் படகிலேயே தங்கி இருந்து ஆழ் கடலில் மீன்பிடிப்பது வழக்கம். அவ்வாறே நேற்று முன்தினம் நள்ளிரவில் கோடியக்கரை அருகே நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அதன் போதே, படகை நிறுத்துமாறு இந்திய கடற்படையினர் கூறிய போது, நிறுத்தாமல் சென்றதால் படகை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இதில், படகில் இருந்த தமிழகம் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவர் காயமடைந்த நிலையில் அவரை இந்திய கடற்படையினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கொலை முயற்சி வழக்கு
இந்த நிலையில் கடற்தொழிலாளி மீதான துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கொலை முயற்சி, மிக கடுமையான ஆயுதம் கொண்டு தாக்குதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் இந்திய கடற்படையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீவிர விசாரணை
அத்துடன் இந்திய கடற்படை வீரர்களிடம், எதற்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது, எச்சரிக்கை சமிக்ஞை செய்தீர்களா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
விசாரணையின் முடிவில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த உண்மை நிலவரம் வெளிவரும் என கடலோர காவல் குழும காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.