இலங்கை கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல் : குற்றச்சாட்டை மறுக்கும் இந்தியா
இந்தியக் கடற்படையினரோ அல்லது இந்தியக் கரையோரக் காவல்படையினரோ இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது எவ்வித தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படை அதிகாரிகளால் இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இக்குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை எனத் தெரிவித்துள்ளதுடன், கடற்றொழிலாளர்கள் விவகாரத்தில் இந்தியா எப்போதும் மனிதாபிமான அணுகுமுறையையே கடைப்பிடித்து வருவதாகவும் உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.
இராஜதந்திர உறவு
பாதுகாப்பு மற்றும் கடற்றொழிலாளர்களின் நலன் சார்ந்து இலங்கை அரசாங்கத்துடன் தாம் தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு மதிப்பளித்து மனிதாபிமான ரீதியிலேயே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இந்தியத் தரப்பு மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் கடந்த 29 ஆம் திகதி இந்திய கடற்படையினால் தாக்குதலுக்கு உள்ளானதாக இலங்கை கடற்றொழிலாளர்கள் சிலர் கரைக்கு திரும்பிய நிலையில் தெரிவித்திருந்தனர்.
அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பிரதேச மக்களினால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |