இந்து சமுத்திரத்தை அமைதி வலயமாகப் பேண வேண்டும் : விடுக்கப்பட்ட கோரிக்கை
இந்து சமுத்திரப் பிராந்தியத்தை அமைதி மற்றும் ஒத்துழைப்பு வலயமாகப் பேண வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகள் பங்கேற்ற 14 ஆவது சர்வதேச மாநாட்டில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது இந்து சமுத்திரத்தில் அதிகரித்து வரும் புவியியல் மற்றும் அரசியல் முக்கியத்துவத்தை அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இணையவழி குற்றங்கள்
அத்துடன் கடல் வழிச் சுதந்திரம், சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்தல் மற்றும் நாடுகளுக்கிடையிலான பயனுள்ள உரையாடல்களை நிலைநிறுத்துவதன் மூலம், பிராந்தியப் போட்டிகள் மோதல்களாக மாறுவதைத் தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதம், இணையவழி குற்றங்கள், கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அபாயங்கள் போன்ற நவீன சவால்களை எதிர்கொள்ள சர்வதேச ஒத்துழைப்பு, புலனாய்வுத் தகவல் பகிர்வு மற்றும் கூட்டு நடவடிக்கைகள் மிகவும் அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தற்போதைய சிக்கலான உலக சூழலில் பேச்சுவார்த்தை, நம்பிக்கை மற்றும் பிராந்திய நிலைத்தன்மையை மேம்படுத்துவதில், சிறிய நாடுகளுக்கும் முக்கிய பங்கு இருப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |