இந்தோ சீனப்போட்டி - சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு கடும் முக்கியத்துவம்
தேசிய பாதுகாப்புக்கு கடும் முக்கியத்துவம்
சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு சுதந்திரத்திற்குப் பின்னர் முன்னொருபோதும் இல்லாதவாறு அதிக கவனத்தை கொண்டதாக காணப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
அதேநேரம் நாட்டில் காணப்படும் அனைத்து விதமான அச்சுறுத்தல்களுக்கும் முகங்கொடுக்க தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக நடத்தப்படும் “ஆராய்ச்சிக் கருத்தரங்கம் - 2022' வின் அங்குரார்ப்பண நிகழ்வில் நேற்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ண பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், நிகழ்காலத்தில் இராணுவமல்லாத தன்மையின் பின்னணியில் பொருளாதார, அரசியல், எரிசக்தி, உள்நாட்டு, இணையம், மனித மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவதைச் சுற்றியே உள்ளது எனக்கூறினார்.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய தந்திரோபாய முறை
அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவ பலம் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கங்கள் பயன்படுத்தும் பல்வேறு தந்திரோபாய முறைகளை அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் ஆயுத மற்றும் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமான மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தல், புவி வெப்பமடைதல், வானிலை மாற்றங்கள், அதிகரித்த கடல் மாசுபாடு, கடல் சுற்றுச்சூழல் தாக்கம், குறையும் மீன்வளம், கடல் வெப்பநிலை, உப்புத்தன்மை அதிகரிப்பு, இயற்கை அனர்த்தங்களினால் இந்து பெருங்கடலில் சமுத்திரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஆகியன இந்து சமுத்திரத்தில் சிறிலங்காவின் பாதுகாப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்..
இந்த நிகழ்வில் தலைமை உரையை ஆற்றிய லலித் வீரதுங்க நவீன பாதுகாப்பு அமைப்புகள் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மாத்திரமன்றி இராணுவம் அல்லாத மற்றும் கலப்பு அச்சுறுத்தல்களுக்கும் முகம்கொடுக்கக்கூடியளவில் அமைந்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.