நடிகர் வடிவேலுவின் உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் உடல் நிலை தொடர்பிலான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி வடிவேலுவின் உடல் நிலை சீராக உள்ளது என்றும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் வடிவேலு, இயக்குநர் சுராஜ் இயக்கி வரும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக லண்டனில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு முடிந்து கடந்த 23ஆம் திகதி வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பினர். அப்போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் நடிகர் வடிவேலு போரூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு 7ஆவது மாடியில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கான அறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் படத்தின் இயக்குநர் சுராஜ்க்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரும் நேற்று இரவு அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் லண்டன் சென்று திரும்பிய படக்குழுவினர் அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.