பிராந்திய நாடுகளை அதிர வைத்த வடகொரியாவின் மற்றுமொரு அறிவிப்பு!
வடகொரியா மீண்டும் புதிய ஏவுகணைகளை பரிசோதித்துள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுத்துள்ளது.
இதேவேளை இந்த பரிசோதனை தங்கள் நாட்டின் மிகப் பெரிய வெற்றியெனவும் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வடகொரியா புதிய இரண்டு ஏவுகணைகளை பரிசோதித்து பார்த்ததாக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தலைமையிலான அரசாங்கம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த பரிசோதனை வெற்றியளித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளதுடன் இது தமது நாடு பெற்ற மிகப் பெரிய வெற்றி என அந்நாடு கூறியுள்ளது.
கடந்த பல நாட்களாக வடகொரிய சில ஏவுகணைகளை செலுத்தியதுடன் தென் கொரியா, ஜப்பான் போன்ற அயல் நாடுகள் மாத்திரமல்லாது அமெரிக்காவும் இது குறித்து கூடிய கவனத்தை செலுத்தி இருந்தது.
தனது ஆயுத பலத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளை வடகொரியா வேகப்படுத்தியுள்ளதாக இந்த நாடுகள் நம்புகின்றன. பரிசோதிக்கப்பட்ட இரண்டு புதிய ஏவுகணைகள் இலக்கை தேடிச் சென்று தாக்கக் கூடியவை என வடகொரியா கூறியுள்ளது.
வடகொரியாவின் இந்த புதிய நடவடிக்கை பிராந்திய நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலில் அமைக்கப்பட்டிருந்த இலக்கை தேடிச் சென்று தாக்கியதாகவும் மிக துள்ளியமாக இலக்கை நோக்கி ஏவுகணைகள் சென்றதாகவும் வடகொரியாவின் அரச ஊடகம் கூறியுள்ளது.
அமெரிக்க முன்னாள் அரச தலைவர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் 2019 ஆம் ஆண்டு முறிவடைந்தன. இதனையடுத்து அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான அணுவாயுதம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நின்று போனது.
இப்படியான பின்னணியில் வடகொரியா தனது ஆயுத பலத்தை தொடர்ந்தும் உலகத்திற்கு காண்பித்து வருகிறது.
வடகொரிய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் கிம் ஜோங் உன் அதற்கு சாதகமான பதிலை இதுவரை வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.