யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை: முன்வைக்கப்பட்ட பிரேரணை
யாழ் செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை நடாத்துமாறு கோரி கொண்டுவரப்பட்ட பிரேரணை ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் முதலாவது அமர்வில் எந்த வித எதிர்ப்பும் இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபையின் கன்னி அமர்வு கடந்த 26 ஆம் திகதி நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி அமர்வின் போது தமிழரசுக் கட்சியின் உப தவிசாளர் சர்வானந்தன் விசேட பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார்.
செம்மணி புதைகுழி
யாழ் செம்மணி புதைகுழியில் தற்போது வரை பல மனித எலும்புக் கூடுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் குறித்த எழும்புக் கூடுகள் யாருடையது ? எந்த காலத்திற்குரியது என்பதை கண்டுபிடிப்பதற்கு சர்வதேச விசாரணை ஒன்றை நடாத்த வேண்டியது அவசியம் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடகிழக்கில் செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதனடிப்படையில், அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற பிரேரணையை இந்த சபையில் நிறைவேற்றி அதனை இலங்கை அரசுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமை ஆணையாளருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அரச கட்டமைப்பு
மூவின மக்களின் பிரதிநிநிகளை கொண்ட ஏறாவூர் பற்று பிரதேச சபையில் தமிழரசுக் கட்சி, தேசிய மக்கள் சக்தி, கிழக்கு தமிழர் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சுயேட்சை குழுக்கள் என தமிழ், முஸ்லீம், சிங்களம் உட்பட 32 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் மேற்படி பிரேரணை எந்த வித எதிர்ப்பும் இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதன்படி வடகிழக்கில் தமிழரசுக் கட்சியின் ஆட்சியமைத்துள்ள உள்ளூராட்சி சபைகளில் செம்மணி குறித்து நிறைவேற்றப்பட்ட முதலாவது தீர்மானமாக இத் தீர்மானம் கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட அரச கட்டமைப்பு ஒன்றின் ஊடாக செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
