யுத்த வடுக்களை சுமந்தும் மங்காத மங்கையாக திகழும் பெண் முன்னாள் போராளி!
சர்வதேச மகளிர் தினமான இன்று பல சர்வதேச நாடுகளிலும் பெண்கள் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்பட்டு, கௌரவப்படுத்தப்படுகின்ற போதிலும், தமிழர் தாயகத்தை பொறுத்தவரை அனேக சவால்களுக்கு மத்தியில் மீண்டெழுந்துவரும் பெண்கள் முக்கியமானவர்களாக கருதப்படுகின்றனர்.
அவ்வாறே தமிழர் தாயக மக்களின் உரிமைகளுக்காக போராடிய பெண்ணொருவரின் சவால்கள் நிறைந்த வாழ்க்கை பற்றி பார்ப்போமானால்,
பல தடைக் கற்களைக் கடந்து செல்வது தான் வாழ்க்கை என்பதற்கு எடுத்துக்காட்டாக தமிழர் தாயகத்திலும் பல பெண்கள் திகழ்கின்றமை யாவரும் அறிந்ததே. வடக்கு கிழக்கில் சுமார் மூன்ற தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தால் இலட்சக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டும், பல பெறுமதியான சொத்துக்களையும், இழந்த இனமாக தமிழினம் வாழுகின்றது.
போரின் வடு
இந்நிலையில், யுத்த காலத்தில் பாதிப்புக்ளை எதிர்கொண்டு வடுக்களைச் சுமந்த வண்ணம் தமது குடும்பத்தை வழிநடத்தும் பெண்கள் அனேகம் பேர் உள்ளனர். அவ்வாறானதொரு பெண்மணியே ஜெயா என அழைக்கப்படும் பொன்னையா ஜெயகுமுதினி.
யாழ்பாணத்தைச் சேர்ந்த இவர், முன்னாள் போராளி, இரண்டு ஆண் பிள்ளைகளின் தாய். 11 வருடங்களுக்கு முன்னரே கணவனால் கைவிடப்பட்ட நிலையிலும், யுத்த தழும்புகளுடனும், உடலில் இரும்புத் துகள்களையும் சுமந்து கொண்டு ஜீவித்து வருவதுடன், தனது இரு பிள்ளைகளின் கல்விக்காக சிறு சிறு தொழில்களை செய்து வருகிறார்.
வீட்டைக்கூட பூர்த்தி செய்ய முடியாத வறுமை
சவால்களுக்கு மத்தியிலும் மனம் தளராத ஜெயா பெட்டிக்கடை வைத்து, சிற்றுண்டிகளைச் செய்து விற்பனை செய்து அதிலிருந்து கிடைக்கும் சிறிய வருவமானத்தில் பிள்ளைகளைக் கவனித்து வருகின்றார்.
யுத்தத்தால் பாதிப்படைந்து 2007 ஆம் ஆண்டு மட்டக்களப்பு போரதீவுபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெல்லாவெளி கிராமத்தில் மீளக் குடியேறிய பின்னர் அரசாங்கத்தால் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள போதிலும் அதனை இற்றைவரையில் பூர்த்தி செய்து கொள்ள முடியாமலுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
பெண்ணால் முடியாதது எதுவும் இல்லை
கணவரும் விட்டுப் பிரிந்த நிலையில் தனது பிள்ளைகளின் கல்விக்காக அயராது பாடுட்டு வரும் முன்னாள் பெண் போராளியான ஜெயா, தனது உழைப்பிலேயே சீவித்து வரும் நிலையில், பெண்ணால் முடியாதது ஒன்று இல்லை என்ற முன்னுதாரணத்துடன் வாழ்ந்து வருகின்றார்.
ஜெயாவைப் போன்று பல பெண்கள் தமிழர் தாயகமெங்கும் தமது குடும்பத்திற்காக அர்ப்பணித்து வாழ்வதுடன், பல சவால்களை எதிர்கொண்டு சாதனைகளையும் படைத்து வருகின்றனர். இவ்வாறானவர்களை போற்றுவதும், மீண்டும் முழுமையாக எழுவதற்கு உதவுவதும் எமது தார்மீக பொறுப்பாகும்.











