வளைகுடாவில் வெடிக்கும் எரிசக்திப் போர்...! பதிலடி கொடுக்க தயாரான ஈரான்
வளைகுடா எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் மிகப்பெரிய கடல்வழி எரிவாயு தளமான தெற்கு பார்ஸ் (South Pars) மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வளைகுடா பிராந்தியத்திலுள்ள எரிசக்தி நிலையங்களைத் தாக்கப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.
எரிவாயு தளம்
ஈரானின் இந்த எரிவாயு தளம் கத்தார் நாட்டுடன் பகிர்ந்துகொள்ளப்படும் உலகின் மிகப்பெரிய எரிவாயு வயலின் ஒரு பகுதியாகும்.
இந்தநிலையில், ஈரானின் இந்த எரிசக்தி நிலையங்கள் மீதான இஸ்ரேலியத் தாக்குதலை ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கை எனக் கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்தத் தாக்குதல் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதனடிப்படையில், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள பல எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களை வெளியேறுமாறு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மூத்த பாதுகாப்பு
குறிப்பாகச் சவுதி அரேபியாவின் சம்ரெஃப் (Samref) சுத்திகரிப்பு நிலையம், ஜுபைல் பெட்ரோ கெமிக்கல் வளாகம் மற்றும் கத்தாரின் ராஸ் லாஃபன் (Ras Laffan) சுத்திகரிப்பு நிலையம் போன்றவை இலக்கு வைக்கப்படலாம் என ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தளபதிகள் படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்கப்போவதாக ஈரான் ஏற்கனவே சபதம் செய்திருந்தது.

இந்தச் சூழலில் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஈரானின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எரிசக்தி விநியோகமும் இதனால் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |