மயிலந்தனைப் படுகொலை...! 39 அப்பாவி தமிழ் மக்கள் பலியான சோகத்தின் வடு
ஈழத்தமிழர்களின் தாயக நிலப்பரப்பின் கிழக்குக் கரையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான மயிலந்தனையில் 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி நிகழ்த்தப்பட்ட கொடூரம், ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றில் ஒரு துயரமான அத்தியாயமாகும்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கன்னிவெடித் தாக்குதல் ஒன்றில் சிறிலங்கா இராணுவத் தளபதி கொப்பேக்கடுவ கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடியாகவே, சிறிலங்கா ராணுவத்தினரால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அச்சம்பவத்துடன் எவ்விதத் தொடர்புமற்ற மயிலந்தனை கிராமத்தின் மீது அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகத் தங்களின் கோபத்தைத் திருப்பிய சிறிலங்காவின் சிங்களப் பாதுகாப்புத் தரப்பினர், அக்கிராமத்தையே கொடூரமாகச் சூறையாடினர்.
அன்று அமைதியாக வாழ்ந்துகொண்டிருந்த அப்பாவி கிராம மக்கள் மீது துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் கோடாரிகளைக் கொண்டு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது. கைக்குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் எனப் பாரபட்சமின்றி 39 பொதுமக்கள் அன்றைய நாளில் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.
அன்றைய நாளில் சிறிலங்காப் படைகள் ஆடிய மனிதவேட்டையானது தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட இனப்படுகொலையாகவே பார்க்கப்படுகிறது.
உயிருக்குப் பயந்த மக்கள் தங்களின் வீடுகள், நிலங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை அப்படியே போட்டுவிட்டு, சொந்த ஊரை விட்டு வெளியேற நேரிட்டது.
ஒரே நாளில் ஒரு முழு கிராமமும் சுடுகாடாக மாற்றப்பட்டு அம்மக்களின் நிம்மதியான வாழ்வு முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டது.
இதேபோன்று கொன்றொழிக்கப்பட்டு, நீதியும் நியாயமும் மறுக்கப்பட்ட அப்பாவித் தமிழ் உறவுகளை ஐபிசி தமிழ் கனதியான வலிகளோடு நெஞ்சில் நிறுத்தி நினைவேந்துகிறது.
வலிகளோடு வாழும் இந்த இனத்தின் மீதான ஒவ்வொரு படுகொலைக்குமான நீதிக்கான பயணத்தில் இதயசுத்தியோடு பயணிப்போம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |