அரசியலில் இருந்து விடைபெற்றார் முன்னாள் அமைச்சர்
அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதர் மஹிந்த சமரசிங்க, தீவிர அரசியலில் மீண்டும் நுழையும் எண்ணம் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், தனிப்பட்ட காரணங்களுக்காக தூதர் பதவியிலிருந்து விலகியதாகவும், பதவி விலகுமாறு அரசாங்கத்திடமிருந்து எந்த அழுத்தமும் வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தூதராக இருந்த காலத்தில் நாட்டுக்கு ஆற்றிய சேவை
சமீபத்தில் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதர் பதவியிலிருந்து விலகிய மஹிந்த சமரசிங்க, இன்று (09) அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கரான வணக்கத்திற்குரிய வரக்ககொட ஸ்ரீ ஞானரத்ன மகா தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கரான வணக்கத்திற்குரிய திப்பட்டவாவவே ஸ்ரீ சுமங்கல மகா தேரர் ஆகியோரைச் சந்தித்து ஆசி பெற்றபோது இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

தூதராக இருந்த காலத்தில், இலங்கை-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்தவும், சர்வதேச நாணய நிதிய (IMF) ஒப்பந்தங்களுக்கு அமெரிக்காவின் ஆதரவைப் பெறவும், அமெரிக்கா விதித்த 10% வரியைத் தக்கவைக்கவும், மேலும் அந்நாட்டிலிருந்து ஒரு கடற்படைக் கப்பலையும் பல உலங்கு வானூர்திகளையும் பெறவும் பாடுபட்டதாக சமரசிங்க நினைவு கூர்ந்தார்.
இனி அரசியலில் ஈடுபட வேண்டாம்
27 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய போதிலும், இனி அரசியலில் ஈடுபட வேண்டாம் எனத் தான் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும், சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக அரசாங்கம் கோரினால், ஆதரவளிக்கத் தான் இன்னும் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
மேலும், தீவிர அரசியலில் இருந்து விலகிவிட்டதால், தற்போதைய அரசியல் சூழல் குறித்துக் கருத்துத் தெரிவிக்கத் தயாராக இல்லை என்றும் முன்னாள் தூதர் தெரிவித்தார்.
மஹிந்த சமரசிங்க தூதரக சேவையில் ஆற்றிய சிறந்த சேவையானது, மல்வத்தை மற்றும் அஸ்கிரி பிரிவுகளின் மகாநாயக்கக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
டச்சு மண்ணை அதிரவைத்த தமிழர் : நெதர்லாந்து ஊடகம் வியந்த பாஸ்கரன் கந்தையாவின் 5,445 கோடி ரூபாய் சாம்ராஜ்யம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |