காடழிப்பை வெளிப்படுத்திய ஆசிரியருக்கு மிரட்டல் - காவல்துறையில் முறைப்பாடு
வவுனியா - கட்டையர்குளம் பகுதியில் இடம்பெற்ற காடழிப்பை வெளிப்படுத்திய ஆசிரியருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் அவதூறு ஏற்படுத்தப்படுவதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் இன்று (25) வவுனியா காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த பகுதியில் கடந்த சில நாட்களாக இரண்டு கிராம அலுவலர்களின் துணையுடன் காடழிப்பு இடம்பெற்று வந்த நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற அக் கிராம மக்களும், கிராம அபிவிருத்திச் சங்கத்தினரும் அதனை தடுத்து நிறுத்தியதுடன், இது தொடர்பில் அரச அதிருடமும் முறைப்பாடு செய்திருந்தனர்.
தொலைபேசியில் மிரட்டல்
இதனையடுத்து, குறித்த கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினரும், குறித்த பிரச்சினையை வெளிக் கொண்டு வந்தவருமான ஆசிரியர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய கிராம அலுவலர் ஒருவர் ஆசிரியருக்கு தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.
போலி முகநூலின் ஊடக குறித்த ஆசிரியரின் புகைப்படத்தை பதிவிட்டு அவதூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட ஆசிரியர் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் அவர்களிடம் முறையிட்டுள்ளதுடன், வவுனியா காவல்துறையிலும் கிராம அலுவலருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
