டூஸ்கா கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதல்: ஐநாவிற்கு ஈரான் அனுப்பிய அவசரக் கடிதம்
ஓமன் வளைகுடாவில் ஈரானிய வணிகக் கப்பலான டூஸ்கா (Toska) மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலைக் கடல் கொள்ளையின் அடையாளங்களைக் கொண்ட ஒரு செயல் என ஐநாவுக்கான ஈரானியத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலிடம் தூதரகம் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைக்கு ஈரான் அதிகாரப்பூர்வக் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
விரோதப் போக்கு
இதில் அமெரிக்காவின் இந்த விரோதப் போக்கு சர்வதேசச் சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயல் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி ஈரானியக் கடற்கரைக்கு மிக அருகாமையில் வைத்து டூஸ்கா கப்பல் முடக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள ஈரான், ஒரு வணிகக் கப்பல் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவது சர்வதேச கடல்சார் விதிகளுக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தின் போது மாலுமிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மீது அமெரிக்கப் படைகள் கட்டவிழ்த்து விட்ட திட்டமிட்ட அச்சுறுத்தல்கள் ஒரு உளவியல் பயங்கரவாதம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது ஒரு நாட்டின் இராணுவம் செய்ய வேண்டிய செயலல்ல மாறாகக் கடல் கொள்ளையர்களின் போக்காகும் என அந்த கடிதத்தில் ஈரான் சாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |