ஈரானுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வைத்த செக்! விதிக்கப்படும் புதிய பொருளாதாரத் தடைகள்
ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைத் தடை செய்யக் காரணமான ஈரானிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளன.
லக்ஸம்பேர்க்கில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பிறகு ஒன்றியத்தின் வெளியுறவுச் கொள்கைத் தலைவர் காஜா கலாஸ் (Kaja Kallas) இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
சர்வதேசக் கடல் வழித்தடத்தில் சுதந்திரமான போக்குவரத்தை அப்பட்டமாக மீறும் ஈரானின் செயலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வணிகக் கப்பல்கள்
வெளியுறவு அமைச்சர்கள் மத்தியில் பேசிய காஜா கலாஸ், மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆஸ்பைடஸ் (ASPIDES) கடற்படைப் பிரிவை மேலும் வலுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது செங்கடல் பகுதியில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் இருந்து வணிகக் கப்பல்களைப் பாதுகாத்து வரும் இக்கடற்படைப் பிரிவு, இனி ஹார்முஸ் நீரிணைப் பகுதியிலும் தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கடல்சார் வணிகப் போக்குவரத்து என்பது பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது எனவும் அதனைச் சீர்குலைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் காஜா கலாஸ் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |