பிரித்தானியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்! ஆங்கிலக் கால்வாய் வழி பாதைகளில் ஈரானின் உளவுத்துறை வலையமைப்பு...
ஆங்கிலக் கால்வாய் (English Channel) வழியாக நடைபெறும் சட்டவிரோத குடியேற்றப் பாதைகளில், ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கடத்தல் வலையமைப்புகள் செயல்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல், பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பு குறித்து புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட பிரித்தானிய நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தியின்படி, ஈரானின் உளவுத்துறையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலரை பிரித்தானியாவின் அதிகாரிகள் தடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், சில சட்டவிரோத குடியேற்றப் பாதைகள், இரகசிய செல்வாக்கு மற்றும் தளவாட வலையமைப்புகளை உருவாக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளையும் விசாரணை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை
அதேவேளை, இந்த நடவடிக்கைகளில் சில, ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை (IRGC) அமைப்பின் யூனிட் 700 பிரிவுடன் தொடர்புடையதாகவும், லண்டனில் செயல்படும் சில முகவர்கள் குறித்து பெயர் குறிப்பிடப்படாத ஒரு ஈரான் அதிகாரி தகவல் தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை. பாதுகாப்பு நிபுணர்களின் கருத்துப்படி, இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டால், அது பிரித்தானியாவுக்கு எல்லைப் பாதுகாப்பு மட்டுமல்லாது, தேசிய பாதுகாப்பு, எதிர்-உளவுப் பணிகள் மற்றும் வெளிநாட்டு அரசுகளின் ரகசிய நடவடிக்கைகள் தொடர்பிலும் குறிப்பிடத்தக்க சவாலாக அமையும்.
மேலும், இதுபோன்ற தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டால், பிரிட்டன் தனது எல்லைக் கண்காணிப்பு, உளவுத்துறை ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வாய்ப்பும் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |