அடி மடியில் கைவைத்த ஈரான் : ரஃபேல் ஆயுத கிடங்கும் துவம்சம் - மறுக்கும் இஸ்ரேல்
இஸ்ரேலின் (Israel) பாதுகாப்பு கவசமாக காணப்படும் அயன் டோம் (Iron Dome) எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்பை தயாரித்த ரஃபேல் நிறுவனத்தின் இஸ்ரேலிய ஆயுத கிடங்கை ஈரான் (Iran) தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் நேற்று (15.06.2025) இரவு மேற்கொண்ட தாக்குதலில் இஸ்ரேலின் ஆயுத கிடங்கு பாரிய சேதத்தை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஹைஃபாவில் இந்த ஆயுத கிடங்கும் மற்றும் எண்ணெய் கிடங்குகள் காணப்படும் நிலையில் இவற்றை குறிவைத்தே ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஏவுகணை தாக்குதல்
நேற்றிரவு 2 மணி நேரத்தில் டெல் அவிவ் மீது 50 ஏவுகணைகளும், ஹைஃபா மீது 20 ஏவுகணைகளும் ஏவப்பட்டிருப்பதாக அதிகாரிகளின் தகவல்களை மேற்கொள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.
இவை அனைத்தும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் வகையை சேர்ந்தது என்பதால், இதை தடுப்பது இஸ்ரேலுக்கு சிரமமாக இருந்திருக்கிறது. எனவே, சில ஏவுகணைகள் இலக்கை தாக்கி அழித்துள்ளன.
ஈரானின் ஷஹாப்-3, சோல்ஃபாகர் ரக பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணிப்பதால் இஸ்ரேலுக்கு இதை தடுப்பது மிகப்பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது.
அயன் டோம்
நேற்றிரவு நடந்த தாக்குதலில் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மேலும் இஸ்ரேலை பாதுகாப்பதே அயன் டோம் தான் என்று இஸ்ரேல் பெருமை பேசி வந்த நிலையில், அதை தயாரித்த ரஃபேல் ஆயுத கிடங்கை ஈரான் தாக்கியிருப்பது, சர்வதேச அளவில் ரஃபேல் நிறுவனத்தின் மீதும், அது தயாரித்த அயன் டோம் அமைப்பின் மீதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இந்த தாக்குதலை இஸ்ரேல் தரப்பு மறுத்திருக்கிறது. எண்ணெய் கிடங்கின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது உண்மைதான் என்றும், ஆனால் ரஃபேல் ஆயுத கிடங்கை தாக்கவில்லை என்று மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
