உலக வரலாற்றில் மிக மோசமான எரிசக்தி நெருக்கடி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, உலகம் தனது வரலாற்றில் இதுவரை கண்டிராத மிக மோசமான எரிசக்தி நெருக்கடியை தற்போது எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச எரிசக்தி முகவரகம் (IEA) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இது உண்மையில் வரலாற்றிலேயே மிகப்பெரிய நெருக்கடி என்று சர்வதேச எரிசக்தி முகவரகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் Fatih Birol பிரான்ஸ் வானொலிக்கு இன்று தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், ஒரு நாளைக்கு சுமார் 13 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் விநியோகம் சந்தையிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது எனவும், இந்த நெருக்கடியானது 1973, 1979 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடிகளின் கூட்டுப் பாதிப்பை விடவும் அதிகமானது எனவும் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை
அத்துடன் ஹோர்முஸ் நீரிணை போன்ற முக்கிய கடல் வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள தடைகள், உலகளாவிய எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகச் சங்கிலியை முற்றாகச் சிதைத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்யாவுடனான பெட்ரோல் நெருக்கடி மற்றும் எரிவாயு நெருக்கடியின் விளைவுகளையும் சேர்த்தால், இந்த நெருக்கடி ஏற்கனவே மிகப்பெரியது என்றும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரின் காரணமாக ஏற்பட்ட எண்ணெய் விலை உயர்வைச் சமாளிப்பதற்காக, மார்ச் மாதத்தில் சர்வதேச எரிசக்தி முகமை (IEA), தனது மூலோபாய கையிருப்புகளில் இருந்து சாதனை அளவான 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை வெளியிட ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |