ஈரானிய மண்ணில் அமெரிக்க இராணுவம் தரையிறங்கினால்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அமெரிக்கா தனது இராணுவ வீரர்களை ஈரானிய மண்ணில் தரையிறக்கினால் அது அமெரிக்காவிற்குப் படுதோல்வியாக அமையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் பிரதி வெளியுறவு அமைச்சர் மஜித் தக்த்-ரவஞ்சி (Majid Takht-Ravanchi) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
வரலாற்றுத் தவறு
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஈரானின் நிலப்பரப்பில் ஊடுருவ அமெரிக்கா முயற்சித்தால் அது மிகப்பெரிய வரலாற்றுத் தவறாக அமையும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, அமெரிக்கப் படைகள் அங்கு நுழையும் பட்சத்தில் அவர்கள் மிகக் கடுமையான எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் அது ஒருபோதும் முடிவில்லாத ஒரு போராக மாறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா முன்னர் வியட்நாமில் சந்தித்த பாரிய உயிரிழப்புகள் மற்றும் தோல்விகளை நினைவூட்டிய அமைச்சர், ஈரானும் அத்தகையதொரு சவாலாகவே இருக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா எப்போது போரைத் தொடங்குவது என்பதைத் தீர்மானிக்கலாம், ஆனால் அதனை எப்போது முடிப்பது என்பது அவர்கள் கையில் இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆக்கிரமிப்பு நடவடிக்கை
பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற சூழலுக்கு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளே காரணம் என்று குற்றம் சாட்டிய அவர், அமெரிக்கா கண்மூடித்தனமாக இஸ்ரேலை ஆதரிப்பது நிலைமையை மேலும் மோசமாக்குவதாகத் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஒருபோதும் போரை விரும்புவதில்லை, ஆனால் தனது இறையாண்மையைப் பாதுகாப்பதில் பின்வாங்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எவ்வித அச்சுறுத்தல்களுக்கும் ஈரான் பணியாது என்பதையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் இந்த எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |