பதவி பறிப்பு முதல் பழிவாங்கல் நடவடிக்கைகள் வரை...! அம்பலப்படுத்திய சிறீதரன்: வெளிவந்த உண்மைகள்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) உட்கட்சிப் பூசல்கள் இன்று நேற்றல்ல, நீண்டகாலமாகவே ஒரு நிழல் யுத்தமாகத் தொடர்ந்து வருகின்றன.
குறிப்பாக, கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மீது தொடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான அரசியல் நகர்வுகள், அவரைத் திட்டமிட்டுப் பலவீனப்படுத்தும் ஒரு நீண்டகால வியூகமாகவே விமர்சிக்கப்பட்டு வருகின்றன.
சிறீதரன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட கணத்திலிருந்தே அவருக்கு எதிரான முரண்பாடுகள் கட்சிக்குள் கூர்மையடைந்தன.
🛑 பொதுவேட்பாளர் நிலைப்பாடு
குறிப்பாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அவர் எடுத்த பொதுவேட்பாளர் ஆதரவு நிலைப்பாடு, கட்சிக்குள் ஒரு பாரிய பிளவை ஏற்படுத்தியது.
இது கட்சியின் உத்தியோகபூர்வ முடிவுக்கு எதிரானது என விமர்சிக்கப்பட்டாலும், சிறீதரன் தரப்போ இது மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் முடிவு என வாதிட்டது.
இந்த நிலைப்பாடே அவர் மீதான தற்போதைய ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கும் அத்திவாரமாக அமைந்திருக்கின்றது எனலாம்.
🛑 இராணுவமயமாக்களுக்கு ஆதரவு
இந்தநிலையில், சிறீதரன் மீதான விமர்சனங்களில் அண்மைய இராணுவ விவகாரம் மிக முக்கியமானது.
அரசியலமைப்புப் பேரவையில் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு இராணுவ அதிகாரி ஒருவரை நியமிக்கச் சிறீதரன் ஆதரவாக வாக்களித்ததாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இராணுவமயமாக்கலை எதிர்க்கும் ஒருவர், சிவில் பதவிக்கு இராணுவ அதிகாரியை எப்படி ஆதரிக்கலாம் என எம்.ஏ. சுமந்திரன் தரப்பு இதனை முன்வைத்து அவரை அரசியலமைப்புப் பேரவையிலிருந்து விலகுமாறு கோரியது.
இது குறித்து லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் தனது விளக்கத்தைச் சிறீதரன் வழங்கியுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், "நான் அத்தகைய இராணுவ ஆதரவுக் கருத்துகளை வெளியிடவோ அல்லது கொள்கைக்கு மாறாகச் செயல்படவோ இல்லை" எனக் குறிப்பிட்டார்.
அத்தோடு, இவை திட்டமிட்டுப் பரப்பப்படும் அவதூறுகள் என அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
இதனுடன், தான் அவ்வாறு பேசியிருந்தால் அல்லது ஆதரித்திருந்தால் அதற்கான முறையான ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
🛑 திடீரென பதவி பறிப்பு
இது ஒருபுறமிருக்கச் சிறீதரனின் அரசியல் பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனையாக, அவரிடமிருந்த நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவி அண்மையில் பறிக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த அதிரடி மாற்றம், எம்.ஏ. சுமந்திரன் தரப்பினரின் தன்னிச்சையான காய்நகர்த்தல்களின் விளைவாகவே நிகழ்ந்ததாகக் கட்சி வட்டாரங்களில் பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
மூத்த உறுப்பினரான சிறீதரனை முறையான அரசியல் கட்டமைப்பிலிருந்து முழுமையாக ஓரங்கட்டும் முயற்சியாகவே இது சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தநிலையில், இது குறித்துத் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்த சிறீதரன், "கட்சியில் இருக்கும் சிலரின் மேலாதிக்கப் போக்கிற்கு எதிராக நான் குரல் கொடுப்பதாலேயே என்னை வெளியேற்றத் துடிக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.
குறிப்பாகத் தான் அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனுடன், நானே சுயமாகக் கட்சியிலிருந்து விலக வேண்டும் என்ற இக்கட்டான சூழலை ஏற்படுத்திப் பல நடவடிக்கைகள் கட்சிக்குள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்துக் கட்சியின் பதில் தலைவருக்கு அவர் விரிவான கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
🛑 சிறீதரன் பதிலடி
இந்தநிலையில், மக்கள் ஆணை பெற்ற ஒரு தலைவரை, உட்கட்சி அதிகாரப் போட்டியால் முடக்க நினைப்பது ஆரோக்கியமானதல்ல என்ற அடிப்படையில் பல கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ச்சியான சட்டச் சிக்கல்கள், பதவி பறிப்புகள் மற்றும் இராணுவ ஆதரவாளர் போன்ற போலிப் பிம்பங்களை உருவாக்குவது என அனைத்து முனைகளிலும் சிறீதரன் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டு வருகின்றார்.
இவ்வாறு, சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோரின் அண்மைய அரசியல் நகர்வுகள் சிறீதரனுக்கு ஆதரவான மக்கள் தளத்தில் பெரும் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளன.
ஒரு மக்கள் பிரதிநிதியை இவ்வாறான விமர்சனங்கள் மற்றும் நிர்வாக முடக்கங்கள் மூலம் ஓரங்கட்ட முனைவது, தமிழரசுக் கட்சியின் நீண்டகால அரசியல் ஒற்றுமையைச் சிதைப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்த்தேசிய அரசியலையே பலவீனப்படுத்தும் ஒரு ஆபத்தான போக்காகவே உருவெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தனது அண்மைய அரசியல் நகர்வுகள் மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் சிறீதரன் பகிர்ந்த விரிவான விடயங்களுடன் வருகின்றது கீழுள்ள காணொளி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |