லொட்டரியில் 161 மில்லியன் பவுண்டுகள் பரிசு - மரணத்தின் விளிம்பில் செய்த செயல்
லொட்டரியில் 161 மில்லியன் பவுண்டுகள் பரிசு பெற்ற பிரித்தானியர் ஒருவர், தன் பணத்தை ஆடம்பரமாக செலவிட்ட விதம் குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது, அவர் தான் மரணமடையப்போவதை அறிந்ததும், ஒரு பிரியாவிடை பார்ட்டி கொடுத்ததைக் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
2011ஆம் ஆண்டு, ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த Colin, Christine Weir தம்பதியருக்கு லொட்டரியில் 161 மில்லியன் பவுண்டுகள் பரிசு கிடைத்தது.
பரிசு கிடைத்ததும், வாரம் ஒன்றிற்கு சுமார் 100,000 பவுண்டுகள் வரை செலவிட்டு, ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார் Colin. ஆடம்பர கார்கள், பங்களாக்கள், ரேஸ் குதிரைகள், என வாங்கிக் குவித்துள்ளார்.
8 ஆண்டுகளில் 40 மில்லியன் பவுண்ட்

அதே நேரத்தில், நண்பர்கள், குடும்பத்தினருக்கும் தன் பணத்தில் பங்கு கொடுத்ததுடன், தொண்டு நிறுவனங்களுக்கும் உதவத் தவறவில்லையாம்.
தான் பரிசாக பெற்ற பணத்தில், சுமார் 8 ஆண்டுகளில் சுமார் 40 மில்லியன் பவுண்டுகளை செலவிட்டுள்ளார் Colin.
ஆனால், அவருக்கு சில உடல் நலப் பிரச்சினைகள் இருந்துள்ளன. 2019ஆம் ஆண்டு, இரத்தத்தில் தொற்று மற்றும் சிறுநீரகப் பிரச்சினை காரணமாக உயிரிழந்துவிட்டார் Colin.
ஒரு பக்கம், தனக்குக் கிடைத்த பணத்தை வைத்து, வாழ்ந்த காலத்தில் Colin மகிழ்ச்சியாக வாழ்ந்தார் என்றாலும், மரணத்திற்கு சிறிது காலத்திற்கு முன் Colin, Christine தம்பதியர் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டிருக்கிறார்கள்.
பிரம்மாண்டமாக நடைபெற்ற இறுதிச்சடங்கு

தனக்குக் கிடைத்த பரிசுத்தொகையில், தன் பங்கில் தான் செலவிட்டதுபோக, மீதியைத் தன் இரண்டு பிள்ளைகளுக்கும் வைத்துப்போயிருக்கிறார் Colin.
அத்துடன், தான் மரணமடையப்போவது தெரிந்ததும், மக்கள் தன்னை மறக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக, நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஒரு பிரியாவிடை பார்ட்டி கொடுத்துள்ளார் Colin.
லாப்ஸ்டர் முதல் விலையுயர்ந்த மதுபானம், சூப் என விருந்தினர்களை மகிழ்ச்சிப்படுத்திய Colin, 2019ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் உயிரிழந்துள்ளார்.
அவரது இறுதிச்சடங்கில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று, அவருக்கு அஞ்சலி செலுத்தினார்களாம். Colin உடைய இறுதிச்சடங்கும் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.