கனடா செல்ல தயாரான யாழ். தம்பதி கைது
போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை(Jaffna) சேர்ந்த தம்பதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தம்பதி விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று(17) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மனைவியும் 40 வயதுடைய கணவனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான தம்பதி
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சந்தேக நபர்கள் இருவரும் ஜப்பானின் நரிட்டா நகரத்திற்குச் செல்வதற்காக நேற்றைய தினம் இரவு 08.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்கள் இருவரும் சோதனை நடவடிக்கைகளுக்காக தங்களது ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபர்களின் ஆவணங்கள் குறித்து சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள், அதனை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதையடுத்து, விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபர்களின் கனடா விசா போலியாக தயாரிக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தரகர் ஒருவரிடம் 80 இலட்சம் ரூபா தருவதாக கூறி இந்த போலி கனடா விசாவை தயாரித்துள்ளதாகவும், ஜப்பானின் நரிட்டா நகரத்திற்குச் சென்று பின்னர் அங்கிருந்து கனடாவுக்கு தப்பிச் செல்ல தயாராக இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளன.
இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
