ஈழத்தில் தொடரும் பேரினவாத ஆக்கிரமிப்பு - தமிழர்களிடமிருந்து பறிபோகும் மற்றுமொரு புராதன சின்னம்!
யாழ்ப்பாணம் நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை அபகரிக்கும் முயற்சியை சிறிலங்கா தொல்பொருள் திணைக்களம் முன்னெடுத்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள வரலாற்று இடங்களை சிறிலங்கா தொல்பொருள் திணைக்களம் அபகரித்து வரும் நிலையிலேயே நெடுந்தீவிலும் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நெடுந்தீவு தமிழர்களுடைய வரலாற்றை பறைசாற்றும் தலைசிறந்த சுற்றுலாத்தளமாக காணப்படும் நிலையில் அங்கு திட்டமிட்டு பௌத்தமயமாக்கல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனுமதி இன்றி விளம்பரப் பலகை
இவ்வாறான நிலையில், கோட்டை மற்றும் மாவிலி இறங்குதுறைப் பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதி இன்றி சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் விளம்பர பலகையும் நாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு நாட்டப்பட்டுள்ள பதாதையை அகற்றி கோட்டையின் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் பேண உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்புப் பணிகள் சிறிலங்கா தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் நெடுந்தீவிலும் இவ்வாறான சம்பவம் தற்போது இடம்பெற்றுள்ளது.
பௌத்த திணிப்பிற்கு முற்றுப்புள்ளி
ஆகவே கறைபடியாத வீரத் தமிழர் வரலாற்றுக்குள் பௌத்தத்தை திணிக்கும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அதிகாரிகள் இனங்களுக்கிடையில் விரோதங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையே தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டு மக்களுக்குள் குரோதங்களை ஏற்படுத்தி விட்டு ஒருபோதும் பொருளாதார மீட்சியைப் பெற முடியாது என்பதனை உரிய தரப்பினர் உணர்ந்துகொள்ள வேண்டும்.
பௌத்த எச்சங்களாக சித்தரிப்பு
தமிழர்களுடைய வரலாற்றை திரிவுபடுத்தி அதனூடாக மேற்கொள்ளப்படவுள்ள பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை உரிய அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கி.மு 200ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாண இராசதானிகளின் கீழ் இருந்த நெடுந்தீவு மற்றும் காரைநகர் பகுதிகளை ஆட்சி செய்த சிற்றரசனே வெடியரச மன்னன்.
இந்த நிலையில் வெடியரசன் கோட்டையின் எச்சங்களை பௌத்த தாது கோபுர எச்சங்களாக சித்தரித்து சிறிலங்கா தொல்பொருள் திணைக்களம் பௌத்தமயமாக்கல் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
