விஜய் ஆட்சிக்கு பின் அதிகரித்த இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்! சுட்டு வீழ்த்த கோரிக்கை
எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழில் படகுகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டாவது கட்டுப்படுத்துங்கள் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் கடற்படையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
யாழ். மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய கடற்தொழிலாளர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து எமது கடற்றொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முற்று முழுதாக அழித்துவிட்டு செல்கின்றனர்.
பெறுமதியான வலை
இந்திய கடற்றொழிலாளர்களின் இத்தகைய செயற்பாடு பல வருடங்களாக இடம்பெற்றுவரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த இந்திய அரசும் தமிழக அரசும் தவறிவிட்டது.

இந்திய தமிழக புதிய முதல்வராக விஜய் பொறுப்பேற்றதன் பின் அதிகளவிலான இந்திய கடற்றொழிலாளர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் தீவகக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய சட்டவிரோத கடற்றொழிலாளர்கள் எமது கடற்றொழிலாளர்கள் கடலில் வீசியிருந்த பல கோடி பெறுமதியான வலைகளை அறுத்து நாசம் செய்தனர்.
தொடர்ச்சியான வருகை
இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர்ச்சியான வருகை எமது கடற்றொழிலாளர்களை வாழ்வாதார நீதியாக பாதிப்பது மட்டுமல்லாது கடற்தொழிலில் இருந்து வேறு தொழில்களுக்கு செல்லவும் நிர்ப்பந்தித்துள்ளது.
இலங்கை கடற்படையிடம் வினையமாக கேட்கிறோம் எல்லை தாண்டும் இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்துங்கள் இல்லையேல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டாவது அவர்களின் வருகையை கட்டுப்படுத்துங்கள்.

எங்களால் இனியும் பொறுமை காக்க முடியாது நாட்டின் ஜனாதிபதியையும் துறைசார் அமைச்சரையும் சந்தித்து எமது கோரிக்கையை தெளிவாக கூற இருக்கிறோம்.
சட்டத்தை நாங்கள் கையில் எடுக்க விரும்பவில்லை ஆகவே இறையுள்ள எமது கடற் பகுதியை பாதுகாக்கும் அதிகாரமும் கடமையும் கடற்படையிடம் உள்ள நிலையில் எல்லை தாண்டும் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கட்டுப்படுத்துங்கள் நாங்கள் பக்க பலமாக இருப்போம்” என தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |