யாழ். சர்வதேச விமான நிலையம் படைத்த சாதனை
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, தனது மிகச்சிறந்த ஆண்டாக 2025 ஐ பதிவு செய்துள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய நிர்வாக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிக்கையில், முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் (2025 மற்றும் முந்தைய ஆண்டுகள்) பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவற்றில் இந்த விமான நிலையம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதனை படைத்துள்ளது
2019-2023 காலப்பகுதியின் வருகையாளர்களின் மொத்த எண்ணிக்கையை விட 2025 ஆண்டில் சுமார் 33,431 வருகையாளர் அதிகமாகும். அத்துடன் சர்வதேச விமான இயக்கங்கள் 1,138 ஆகும். இது ஒரு புதிய உச்சமாகும். தினசரி 7 விமானங்கள் செயல்பாட்டு சாதனை படைத்துள்ளது.

இது 2026 ஜனவரியில் எட்டப்பட்டது. இதில் 2 சர்வதேச மற்றும் 5 உள்நாட்டு விமானங்கள் உள்ளடங்கும். முனைய விரிவாக்கத் திட்டமானது 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 700 மில்லியன் ரூபா செலவிலான விரிவாக்கத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.
இது ATR ரக விமானங்களில் இருந்து Airbus A320 போன்ற பெரிய விமானங்களைக் கையாளும் வகையில் முனையத்தின் கொள்ளளவை மேம்படுத்தும்.
முதல் முறையாக மலேசியா, ஹைதராபாத் மற்றும் சென்னையில் இருந்து சர்வதேச விமானங்களை யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் வரவேற்றது.
யாழ்ப்பாண நுழைவாயில்
ஹைதராபாத்திலிருந்து முதலாவது சர்வதேச மருத்துவ வெளியேற்ற (MEDEVAC) விமானச் சேவையை வெற்றிகரமாக கையாண்டு, அவசரச் சேவைகளுக்கான தனது தயார்நிலையை உறுதிப்படுத்தியது. 'டிட்வா' (Ditwah) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களுக்கு, அமெரிக்க விமானப்படை மற்றும் ஏனைய சர்வதேச பங்காளிகளின் ஊடாக நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதற்கான மூலோபாய மையமாக செயற்பட்டது.

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் இந்த வளர்ச்சி, 2025 இல் இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் (AASL) 19.06 பில்லியன் ரூபா இலாபத்திற்குப் பங்களிப்பு செய்துள்ளது.
இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுடனான தொடர்பை வலுப்படுத்துவதன் மூலம், 2026 ஆம் ஆண்டளவில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அரசாங்கத்தின் இலக்கை அடைய இது நேரடியாக உதவியுள்ளது.
இந்த வரலாற்று மைல்கல் எமது விமான நிலைய ஊழியர்களின் அர்ப்பணிப்புக்கும், சர்வதேச விமான நிறுவனங்கள் யாழ்ப்பாண நுழைவாயில் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்குமான சான்றாகும் என யாழ்ப்பாணம் (JIA ) சர்வதேச விமான நிலைய நிர்வாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |