தமிழர் தாயகத்தில் கொட்டித் தீர்க்கப்பட்ட வன்மம்!! ஈழத்தமிழரை கருவறுக்கவா?
தமிழின அழிப்பு என்பது இன்று நேற்று ஆரம்பமானதல்ல. மாறாக பிரித்தானியாவின் காலனித்துவத்திலிருந்து இலங்கை விடுபட்ட காலத்திலிருந்து தென்னிலங்கை பேரினவாதம் தமிழரை கட்டமைப்பு ரீதியாக மலினப்படுத்தி அழிக்கும் சதி திட்டங்களை வகுத்திருந்தது.
அதன் ஒரு அங்கமாகவே யாழ் நூலக எரிப்பின் துன்பியல் சம்பவம் பதிவாகின்றது.
யாழ். நூலகம் ஆசியாவின் அறிவின் அதிசயம். தமிழர் அறிவின் மூல அத்திவாரம். கல்விமான்களையும் கலாசார விழுமியங்களையும் கட்டியேழுப்பிய கட்டிக்காத்த அறிவின் அறனாய் நிகழ்ந்ததே யாழ் நூலகம்.
பௌத்த பேரினவாதிகளின் பொறாமையும் எரிச்சலும் போட்டியும் ஈழத்தமிழர் வாழ்வில் பல்வேறு அழிவுகளையும் துன்பங்களையும் பதிவு செய்த இரத்த வரலாறு இன்றும் ரணமாகவே உழன்று கொண்டு இருக்கிறது.
பொருளாதாரத்திலும் கல்வி அறிவிலும் மேம்பட்ட சமூகமாகிய ஈழத்தமிழரை கருவறுக்க காத்திருந்த தருணமாவே யாழ் நூலக எரிப்பு பதிவாகிறது.
யாழில் இடம்பெற்ற மாவட்ட சபைத் தேர்தலே இன அழிப்பின் வன்முறையான தொடக்கம் எனலாம். அன்று வரை பேரினவாத்த்தின் மனங்களில் உழன்று கொண்டிருந்த வன்ம தீ, தமிழர் தாயகத்தில் கொட்டித் தீர்க்கப்பட்டது.
ஆம் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆந் திகதி பூபாலசிங்கம் புத்தகசாலையிலிருந்து தொடங்கிய வன்முறை, ஈழநாடு பத்திரிகை நிறுவனம், அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடு எரிப்பு, சுண்ணாகத்தில் கடைகள் எரிப்பு என வியாபித்து 1981 மே 1 ந் திகதி இரவு 10 மணியளவில் யாழ் நூலகத்தில் ஏற்படுத்திய பெரும் தீ மூட்டலுடன் உச்சம் பெற்றது. தீயில் 97000 அறிவு பெட்டகங்கள் எரிந்து சாம்பல் மேடாகியது.
அரிய ஏடுகளும், பத்திரிகைகள், சஞ்சிகைகள், புத்தகங்கள், குறிப்புக்கள், ஆய்வு நூல்கள், ஆன்மீகம், விஞ்ஞானம், வானசாத்திரம், கணிதம், இலக்கியம், சட்டம், பொருளாதாரம் என பல அறிவு பொக்கிசங்கள் தடயமின்றி எரித்து அழிக்கப்பட்டது.
தமிழரின் அறிவு களஞ்சியம் எரிக்கப்பட்டதை கண்ணுற்ற பல்துறை ஆளுமை, தமிழ் மூதறிஞர் அருட்தந்தை டேவிட் அடிகளாளர் மாரடைப்பு காரணமாக தனது இன்னுயிரை தமிழிற்காய் துறந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜேயவர்த்தனவின் ஆட்சியில் அரங்கேற்றப்பட்ட கட்டமைப்பு ரீதியான இன அழிப்பின் உச்சமான நூலக தீ மூட்டலை காமினி திஸ்ஸநாயக்க மற்றும் மத்தியுஸ் ஆகிய முக்கிய பௌத்த பேரினவாதிகள் முன்னின்று நிகழ்த்தி முடித்தருந்தனர்.
கட்டமைப்பு ரீதியான இனவழிப்புக்கான அதிஉச்ச சான்றாக நூலக எரிப்பு விளங்கிய போதிலும் இதுவரை நீதியும் கிட்டவில்லை இனவழிப்பு ஓயவுமில்லை. தொடரும் துன்பியலாக இன்றும் பௌத்த சிங்கள கடும்போக்குவாதிகள் ஆக்கிரமிப்புக்களும், அத்துமீறல்களும் தொடரத் தான் செய்கின்றன.
இன நல்லிணக்கம் பேசும் இவர்கள் இன்றளவலும் ஈழத்தமிழரை ஆற்றுப்படுத்தவும் இல்லை, அரவணைக்கவும் இல்லை.
அன்று இட்ட தீ இன்று 40 வருடங்களை எட்டியும் ஆறாத வலியாய் ஈழத்தமிழர் மனங்களில் எரிந்து கொண்டு தான் இருக்கிறது - காலம் மாறலாம் ஆனால் காலத்தில் பெற்ற காயம் மாறாது - ஆறாது.