யாழ். மாநகர மேயர் யார்...! கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம்: சைக்கிளுக்கு பெருகும் ஆதரவு
யாழ். மாநகர சபையின் ஆட்சியினை கைப்பற்றுவதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி (Tamil National People's Front) மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன இணைந்து செயற்படுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண (Jaffna) நகரில் உள்ள தனியார் விடுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
தமிழ் தேசிய பேரவையின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் (Gajendrakumar Ponnambalam) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கமும் கையொப்பமிட்டனர்.
பேச்சுவார்த்தை
ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் தமிழ் தேசிய பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், ந.சிறீகாந்தா, பொ.ஐங்கரநேசன், எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.சரவணபவன், க.அருந்தவபாலன், க.நாவலனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன்.
மற்றும் கோவிந்தன் கருணாகரம், சுரேஸ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார், நாகலிங்கம் இரட்ணலிங்கம், பா.கஜதீபன், க.சர்வேஸ்வரா உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.
உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் வடக்கில் பெரும்பாலான சபைகளில் ஆட்சி அமைப்பதில் தமிழ் கட்சிகளிடையே இழுபறி நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு 12 ஆசனங்களும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு 4 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றன. அதேவேளை இலங்கை தமிழரசு கட்சிக்கு 13 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன.
மேயர் தெரிவில் எதுவும் நடக்கலாம்
இந்நிலையில் யாழ். மாநகர மேயர் தெரிவுக்கான ஆதரவு தொடர்பில் தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தனர்.
தற்போதுள்ள நிலைமையின் அடிப்படையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இணைந்து செயற்படும் பட்சத்தில் யாழ் மாநகர சபையில் மொத்தமாக 16 ஆசனங்களுடன் மேயர் தெரிவில் முன்னிலை வகிக்கக் கூடிய நிலை உருவாகியுள்ளது.
அதேவேளை தமிழரசு கட்சியினை பொறுத்தவரையில் மேயர் தெரிவின் போது ஈ.பி.டி.பியினர் ஆதரவளிப்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இறுதி நேரத்தில் யாழ். மாநகர மேயர் தெரிவில் எதுவும் நடக்கலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இது இவ்வாறு இருக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன இணைந்து செயற்படும் பட்சத்தில் யாழ் மாவட்டத்தில் பத்திற்கும் மேற்பட்ட சபைகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



