யாழ் மாநகர சபையின் வாகன தரிப்பிட குத்தகை ஒப்பந்தம் இரத்து - முதல்வர் மணிவண்ணன்!
யாழ் மாநகர சபைக்கு சொந்தமான வாகனத் தரிப்பிடங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டு, கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.
குறித்த வாகன தரிப்பிட குத்தகையை யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் இரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்தநிலையில், தற்போது வாகன தரிப்பிட கட்டணம் வசூலிக்கும் குத்தகைதாரருடனான ஒப்பந்தத்தை முடிவுறுத்தி, இரத்து செய்ய கையொப்பம் இட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாகன தரிப்பிட குத்தகை ஒப்பந்தம் இரத்து

நபர் ஒருவர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள வர்த்தக நிலையம் முன்பாக வாகனத்தை நிறுத்தியுள்ளார், குறித்த நபரிடம் வாடகைக் கட்டணம் அறவிடும் நபர் சென்று தரிப்பிட வாடகையை கேட்டுள்ளார்.
இதனால் குறித்த இடத்தில் கடுமையான வாய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன், தகாத வார்த்தைப் பிரயோகங்கள் வரை உச்சம் பெற்றிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.மாநகர முதல்வருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து , சம்பவ இடத்திற்கு முதல்வர் சென்ற வேளை தர்க்கத்தில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து விலகி சென்று இருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பான விளக்கத்தை முதல்வர் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

வாகன தரிப்பிட கட்டணம் அறவிட குத்தகைக்கு எடுத்த நபரினால் வேலைக்கு அமர்த்தப்பட்ட நபர்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் மாநகர முதல்வருக்கு கிடைத்த வண்ணம் இருந்தமையால், கடந்த வாரம் குத்தகைதாரரை அழைத்து கடுமையாக எச்சரித்து, இனி வரும் காலங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால், குத்தகையை இரத்து செய்யவோம் எனவும் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், இன்றைய சம்பவத்துடன் முதல்வரின் அனுமதியுடன் குத்தகை தாரருடனான ஒப்பந்தத்தை யாழ்.மாநகர சபை முடிவுறுத்திக்கொண்டது.
இனிவரும் காலங்களில் வாகன தரிப்பிட கட்டணங்களை யாழ்.மாநகர சபையே அறவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.