நினைவேந்தலை கொச்சைப்படுத்துவதாக செயற்பட்ட கட்சியினர் - தள்ளுமுள்ளில் ஒருவருக்கு தீக்காயம்!
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலில் இருதரப்பிற்கு இடையில் குழப்பம் நிலை ஏற்பட்டுள்ளது.
நினைவிடத்தில் ஏற்பட்ட குழப்பத்தில் ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து உடனடியாக நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டு தீக்காயம் ஏற்பட்ட நபரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் எல்லை மீறி, முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பத்தினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், சக கட்சியினர் என அனைத்து தரப்புகளுடனும் வலிந்து முரண்பாடுகளை ஏற்படுத்தி அநாகரிகமான முறையில் நடந்து கொண்டுள்ளனர்.
அவர்கள் அவ்வாறு அநாகரிகமான முறையில் நடந்து கொண்டிருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களை கட்டுப்படுத்தாது, அருகில் இருந்த கொட்டகைக்குள் இருந்து வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தமை அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி இருந்தது.
தொடக்க நாள் முதல் முரண்பாடு
இதேவேளை, தியாக தீபத்தின் நினைவேந்தல் நாளின் ஆரம்ப நாளுக்கு முதல் நாளான 14ஆம் திகதி இரவு அகில இலங்கை தமிழ் காங்கிரசினர் நினைவிடத்தினை மறைத்தவாறு பந்தல் அமைத்துள்ளனர்.
அதன் போது அங்கிருந்தவர்கள் அவ்வாறு பந்தல் அமைக்க வேண்டாம் என்று கூறிய போது அவர்களுடன் முரண்பட்டார்கள்.
தொடக்க நாளன்று, தியாக தீபத்தின் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த படத்தினை மறைத்தவாறு காங்கிரசினர் கொடி கம்பங்களை நாட்டினார்கள். அவ்வாறு படங்களை மறைக்குமாறு கொடி கம்பங்களை நட வேண்டாம் என்ற போதும் முரண்பட்டுக்கொண்டார்கள்.
தொடர்ந்து நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளிலும் சிறு சிறு சச்சரவில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்றைய தினமும் முரண்பாடு.
இவ்வாறான நிலையில், இறுதி நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நேற்றைய தினம் மேற்கொள்ள முற்பட்ட யாழ். மாநகர சபை உறுப்பினர்களான பார்தீபன் மற்றும் தனுஜன் ஆகியோருடன் முரண்பட்ட காங்கிரசினர் அவர்ளை தாக்கவும் முற்பட்டனர்.
அத்துடன் தியாக தீபத்தின் நினைவிடத்தை காலை முதல் காங்கிரசினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். நினைவிடத்தை சுற்றி மஞ்சள் உடுப்புக்களுடன் நின்று, அஞ்சலி செலுத்த வருபவர்களை மாத்திரம் அனுமதித்து மற்றைய கட்சிகள், அமைப்புக்கள் சார்ந்தவர்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நேரம் முந்தி தீபம் ஏற்றினார்கள்
அதுமட்டுமன்றி தியாக தீபம் ஆகுதியான 10.48 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்படுவதாக இருந்த போது, தாமே அவற்றை முன்னிருந்து ஏற்ற வேண்டும் எனும் போட்டியில், தள்ளு முள்ளுக்களுக்கு மத்தியில் 3 நிமிடங்கள் முந்தி 10.45 மணியளவில் தீபத்தினை ஏற்றினார்கள்.
இதேவேளை, கைதடி பகுதியில் இருந்து இரு இளைஞர்கள் தூக்கு காவடி எடுத்து தியாக தீபத்தின் நினைவிடத்தினை 10.40 மணியளவில் வந்தடைந்தனர். அவ்வாறு வந்தவர்கள் நினைவிடத்தின் முன்பாக காவடியை இறக்க முற்பட்ட போது காங்கிரசினர் அனுமதிக்காது முரண்பாடுகளை வளர்த்தனர்.
தாம் நினைவிடம் முன்பாக தீபம் ஏற்ற போகிறோம். என அவ்விடத்தினை சுற்றி கைகளை கோர்த்தவாறு நின்றனர். அதன் போது காவடியுடன் வந்தவர்கள் காவடியை இறக்கிய பின்னர் தீபம் ஏற்றுங்கள், தீபம் ஏற்றுவதற்கு 08 நிமிடங்கள் இருக்கின்றன தானே என கேட்ட போது, அவ்வாறு அனுமதிக்க முடியாது என முரண்பட்டுக்கொண்டனர்.
அதனால் அப்பகுதியில் தர்க்கம் ஏற்பட்ட போது, அந்த அமளிக்குள் அவசரப்பட்டு, மூன்று நிமிடங்களுக்கு முன்னரே தீபம் ஏற்றினார்கள்.
வேலன் சுவாமிகளை தகாத வார்த்தைகளால் திட்டினார்கள்
அமளிக்குள் சுடர் ஏற்றிய பின்னரே ஒலிபெருக்கியில் இரு நிமிட அக வணக்கம் செய்யுமாறு அறிவிக்கப்பட்டது. அதன் போதும் அவ்விடத்தில் அமைதியின்மை காணப்பட்டமையால் , வேலன் சுவாமிகள் அமைதி காக்குமாறு கூறிய போது, காங்கிரசினர் தகாத வார்த்தைகளால் அவரை பேசினார்கள்.
தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது மலர் அஞ்சலி செலுத்த வருவோருக்கு இடையூறாக அவ்விடத்தில் தாமே மலர் அஞ்சலி செலுத்த காங்கிரசினர் தடைகளை ஏற்படுத்தும் விதமாக நினைவிடத்தில் குழுமி நின்றனர்.
மலரஞ்சலி செலுத்தியவர்கள் கீழே இறங்கி மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்குமாறு கோரிய போது முரண்பட்டு கொண்டனர்.
பொறுமைக்கு பின் அடாத்தாக காவடியை இறக்கிய முன்னாள் போராளிகள்
காலை 10.40 மணியளவில் நினைவிடத்திற்கு வந்த காவடியை 11.15 மணி தாண்டியும் இறக்க விடாது தடுத்து வைத்திருந்த காங்கிரசினரின் தடைகளை மீறி முன்னாள் போராளிகள் காவடியை இறக்க முற்பட்ட போது தர்க்கம் ஏற்பட்டது.
அவற்றையும் மீறி முன்னாள் போராளிகள் காவடியை நினைவிடத்தின் முன்பாக இறங்கினார்கள்.
காவடியை இறக்க தடை ஏற்படுத்தும் விதமாக பிரதான தீபத்தினை காங்கிரசினர் நினைவிடத்தின் முன்பாக வைத்திருந்தனர். காவடி இறக்க ஏதுவாக அதனை சற்று தள்ளி வைக்குமாறு கூறிய போது ஏற்பட்ட தள்ளு முள்ளில், தீபத்தின் சுடு எண்ணெய் பட்டு ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளானார்.
குழப்பம்
அவரை அங்கிருந்தவர்கள் நோயாளர் காவு வண்டியில் ஏற்றி யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறாக இன்றைய தினம் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் நடந்து கொண்ட அநாகரிக செயற்பாடு அப்பகுதியில் நின்ற மக்கள் மத்தியில் கடுமையான விசனத்தை ஏற்படுத்தி இருந்தது.
இவ்வாறான நிலையில் பெரும் திரளான மக்கள் நினைவேந்தல் திடலுக்கு வருகை தந்து உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் உணர்வுபூர்வ அஞ்சலியை குழப்பும் செயற்பாடாக இருதரப்பினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.