இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட யாழ். தனியார் வைத்தியசாலை : நீதிமன்றின் அதிரடி உத்தரவு!
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, முழுமையான இரத்தப் பரிசோதனை (Full Blood Count - FBC) ஒன்றுக்கு நோயாளிகளிடம் அதிக கட்டணம் அறவிட்டதை ஒப்புக்கொண்ட யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலைக்கு 3 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்படும் சில மருத்துவப் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதிகபட்சக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, முழுமையான இரத்தப் பரிசோதனை ஒன்றிற்காகத் தனியார் துறையினரால் அறவிடக்கூடிய அதிகபட்சக் கட்டணம் 400 ரூபாயாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவு
எனினும், அந்த வைத்தியசாலை குறித்த பரிசோதனைக்காக 550 ரூபாய் வீதம் அறவிடப்பட்டுள்ளமை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளால் ஜூலை 13 அன்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பொன்றின் போது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
குறித்த வழக்கு ஜூலை 21 அன்று விசாரணைக்கு வந்த போது வைத்தியசாலை மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, குறித்த நிறுவனத்திற்கு 3 மில்லியன் ரூபாய் அபராதத்தை நீதிமன்றம் விதித்துள்ளது.
மேலும், இழைக்கப்பட்ட குற்றம் தொடர்பில் பிரதிவாதி நிறுவனத்தின் சொந்தச் செலவிலேயே பிரதான பத்திரிகைகளில் அறிவிப்பொன்றைப் பிரசுரிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை
தனியார் மருத்துவமனை அல்லது மருத்துவ ஆய்வுகூடங்களில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

நீங்கள் செலுத்தும் பணத்திற்குச் சரியான பட்டியல் அல்லது பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்வது உங்களது நுகர்வோர் உரிமையாகும் எனவும், தேவையான சந்தர்ப்பங்களில் அதனை ஒரு முக்கிய சான்றாகப் பயன்படுத்த முடியும் எனவும் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணத்தை விடக் கூடுதலாகப் பணம் அறவிடப்படும் சந்தர்ப்பங்கள் தொடர்பில், அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகப் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முறைப்பாடளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 20 மணி நேரம் முன்