இங்கிலாந்துக்காக செஸ் விளையாடும் யாழ்ப்பாண தமிழச்சியின் நெகிழ்ச்சியான தருணம்
நெகிழ்ச்சியான தருணம்
யாழ்ப்பாண பெற்றோருக்கு பிறந்து இங்கிலாந்து அணிக்காக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து மகளிர் அணி வீராங்கனை அக்ஷயா கலையழகன் லண்டனில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்படும் போது, ஒரு வகையான வீடு திரும்பும் உணர்வு ஏற்படுவதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
21 வயதாகும் அக்ஷயாவின் பெற்றோர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். 90-களில் இலங்கை உள்நாட்டுப் போரின் போது லண்டனுக்கு புலம்பெயர்ந்தனர். "இலங்கைத் தமிழச்சியாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இலங்கை மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு நாடுகளிலும் வேரூன்றியிருந்ததால், ஒலிம்பியாட் போட்டி நடக்கும் இடம் சென்னை என அறிவிக்கப்பட்டபோது நான் மிகவும் உற்சாகமடைந்தேன். நான் கடைசியாக 2009-2010க்கு இடையில் அங்கு சென்றேன். மீண்டும் அங்கு வர முடியவில்லை" என்று அக்ஷயா கூறினார்.
கணக்காளராக பணிபுரியும் அக்ஷயாவின் பெற்றோர், எட்டு வயதிலேயே அவளை சதுரங்க விளையாட்டில் அறிமுகப்படுத்தினர். அவர் சர்ரேயில் உள்ள நான்சுச் பள்ளியில் போட்டிகளை வெல்வதன் மூலம் தனது செஸ் விளையாட்டை தொடங்கினார்.
அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்
2013-ஆம் ஆண்டில், அக்ஷயா ELO மதிப்பீட்டில் 2158 புள்ளிகள் பெற்று 12 வயதில் British women's crown பட்டத்தை வென்றதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
2015-ஆம் ஆண்டிலும் அவர் தனது சாதனையை மீண்டும் செய்தார். Tromso, Norway (2014) , Baku in Azerbaijan (2016) மற்றும் Batumi, Georgia (2018) என தொடர்ச்சியாக மூன்று ஒலிம்பியாட்களில் அக்ஷயா விளையாடியுள்ளார். அக்ஷயா தனது சதுரங்க விளையாட்டில் முதலிடத்தில் இருப்பது மட்டுமல்லாமல், தனது கல்வியிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார்.
தற்போது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு சட்ட மாணவியாக உள்ளார். "ஒலிம்பியாட் மிகவும் கடினமான மற்றும் நீண்ட போட்டியாகும். நிகழ்வில் சிறப்பாக செயல்படுவதிலேயே எங்கள் கவனம் இருக்கும், அதேநேரம் சென்னையில் உள்ள கோயில்களைப் பார்க்கவும், உள்ளூர் உணவு வகைகளை ரசிக்கவும் சிறிது நேரம் ஒதுக்க விரும்புகிறேன்" என்று அவர் கூறினார்.
இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புகிறேன்
"வீட்டில், நாங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசுகிறோம். எனவே, சென்னையில் உள்ள உள்ளூர் மக்களுடன் உரையாடும்போது எனக்கு கடினமாக இருக்காது" என்று அவர் கூறினார். மேலும், "நான் இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புகிறேன் ஆனால் தற்போதைய (அரசியல்) நிலைமையில் இது மிகவும் கடினம். எதிர்காலத்தில் அது சிறப்பாக மாறும் என்று நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சதுரங்க கழகம்
அவர்களது வேர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க, அக்ஷயாவின் குடும்பத்தினர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சதுரங்க கழகத்தை நடத்தி வருகின்றனர்.
"சதுரங்கப் பலகைகளை வாங்குவதற்கும், அங்கு வந்து விளையாடுபவர்களுக்கு புத்தகங்களை அனுப்புவதற்கும் நாங்கள் நிதி வழங்குகிறோம். ஆர்வமுள்ள மாணவர்கள் செஸ் போட்டிகளில் கலந்துகொள்ள நிதியும் ஏற்பாடு செய்துள்ளோம்" என்று அக்ஷயா கூறினார்.