எம்மை வெறுப்பவர்கள் மீது அன்புகாட்டுங்கள் - பிரதமர் விடுத்துள்ள நந்தார் வாழ்த்துச் செய்தி
அமைதி மற்றும் அன்பின் அடையாளத்தை இப்பூவுலகில் விட்டுச்சென்ற இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நத்தார் நினைவூட்டுகிறது. இறைவனின் அன்பும், மனித கண்ணியமும் மனிதநேயத்தை அடிப்டையாகக் கொண்ட சமுதாயத்திற்கு நம்பகமான அடித்தளமாக அமைந்தது என சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்க (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
பெத்லஹேமில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த இயேசு கிறிஸ்து, இவ்வுலகை யதார்த்தமாக நோக்குவதற்கு அவரது பிறப்பு முதலே முன்மாதிரியாக திகழ்ந்தார். நல்லுள்ளம் படைத்தவர்கள் அமைதியை பகிர்ந்துக் கொள்வார்கள்.
தம் மீது வெறுப்பு கொண்டவர்கள் மீதும் அன்பு காட்டுபவர்களாக திகழ்வார்கள். அன்பு, அமைதி மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் பொருள் உணர்ந்து தமது வாழ்க்கையை உயிர்ப்பித்துக் கொள்வர்.
சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்கவும், இவ்வுலகில் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்காகவுமே இயேசு கிறிஸ்து தனது முழு வாழ்நாளையும் அர்ப்பணித்தார்.
அந்த வெளிப்பாட்டை சரியான முறையில் உணர்ந்து, இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதன் மூலம் ஒவ்வொரு கிறிஸ்தவரின் வாழ்க்கையும் ஒளிமயமாகும்.
கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் வீழ்ச்சியடைந்த உலகை மீள புத்துயிர் பெறச் செய்வதுடன், நம்பிக்கை நிறைந்த எதிர்பார்ப்புகளுடன் நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவது உங்களுடைய பொறுப்பாகும்.
'நட்சத்திர ஒளியும், கிறிஸ்துவின் பிறப்பும், உலகை உயிர்ப்பிக்கும்' எனும் தொனிப்பொருளில் அலங்கரிக்கப்படும் இம்முறை நத்தார் தினம் ஒட்டுமொத்த உலகவாழ் மற்றும் இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்களுக்கு அர்த்தமுள்ள மற்றும் மகிழ்ச்சியான நாளாக அமைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.