மீண்டும் உக்ரைனுக்கு இராணுவ உதவி - அமெரிக்காவின் புதிய காய்நகர்த்தல் முயற்சி
உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், அமெரிக்கா உக்ரைனுக்கு மேலும் 37 இலட்சம் அமெரிக்க டொலர் பெருமதியான ஆயுத உதவிகளை மீண்டும் வழங்கியுள்ளது.
இலங்கை மதிப்பில் இது 120கோடிக்கும் அதிகமாகும். ஆசிய பகுதிகளில் கிழக்கு நோக்கி தனது எல்லையை விரிவுபடுத்தக்கூடாது என்பதுதான் அமெரிக்காவிடம் முன்னாள் சோவியத் ஒன்றியம் போட்ட ஒப்பந்தமாகும்.
ஆனால் தற்போது நோர்வே முதல் துருக்கி வரை நேட்டோ தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
நேட்டோவில் இணைக்க முயற்சி

அதேபோல் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்து வெளியேறி தனி நாடுகளாக அறிவித்துக்கொண்ட சின்ன சின்ன நாடுகளையும் நேட்டோ கைப்பற்றியுள்ளது.
இந்த கைப்பற்றலில் ஒரு பகுதியாகதான் உக்ரைனை தனது வலையில் விழவைத்துள்ளது. உக்ரைன் என்பது சிறிய நாடாக இருந்தாலும் ஒட்டுமொத்த ரஷ்யாவின் உணவு தேவையில் சுமார் 27 சதவிகிதத்தை பூர்த்தி செய்யும் அளவுக்கு அந்நாட்டில் இயற்கை வளங்கள் காணப்படுகின்றன.
எனவே இந்நாட்டை நேட்டோவில் இணைக்க அமெரிக்க முயற்சிக்க, அதற்கு உக்ரைனும் சம்மதித்தது.
இராணுவ உதவி

உலக நாடுகள் அனைத்தும் இதனை போர் என்று சொல்ல ரஷ்யா இதனை சிறப்பு இராணுவ நடவடிக்கை என்று அழைத்து வருகிறது. தொடக்கத்தில் ரஷ்யாவின் கை போரில் ஓங்கி இருந்தாலும், தற்போது உக்ரைன் கொஞ்சம் கொஞ்சமாக பலமடைந்து வருகிறது.
இதற்கு காரணம் அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆயுத உதவிதான். இந்த போர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கினாலும், 2021ம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திலிருந்தே அமெரிக்கா, உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை செய்து வந்துள்ளது.
தற்போதுவரை 29 முறை இவ்வாறு இராணுவ உதவிகளை செய்து வந்திருக்கிறது. இந்த 29 முறையும் சேர்த்து கணக்கிட்டால் சுமார் 24.9 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அமெரிக்கா, உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை செய்திருக்கிறது.