போராடத்தெரியாத தமி்ழ் தேசிய கட்சிகள்
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி T.சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலும், அதனைத்தொடர்ந்து அவரது பதவி விலகலும் தமிழர் தாயகப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஒரு நீதிபதிக்கே இந்நிலை என்றால் சாதாரண மக்களாகிய நமது நிலை என்னவாகும் என்கிற பெருமூச்சோடு அநேகர் கடந்துபோனார்கள். வெகுசிலர் கோபமடைந்தார்கள். இளையோர் சமூகவலைதளங்களில் எழுதி ஆறினார்கள்.
வடக்கு, கிழக்கு பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்துறை சார்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். நீதி தேவதையை நிறுவி, “அரோகரா” எனக் கோசமிட்டுப் போராடினர்.

தமிழ் தேசியத்தை மூலதனமாக்கியிருக்கும் அரசியல் கட்சிகள், யாழ்ப்பாணத்தின் மருதனார்மடத்திலிருந்து மனிதச் சங்கிலி போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தது.
அந்தப் போராட்டத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டும் கலந்துகொண்டு, உலகளவில் நடத்தப்பட்ட மிகச் சிறிய மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு உதாரணமான நிகழ்வாக மாற்றினார்கள்.
அதற்கு அடுத்தவந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், எதிர்வரும் 20 ஆம் திகதி, கடையடைப்புடன்கூடிய கர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன.
சர்வதேசம் பார்த்துக்கொள்ளும்
தமிழ் தேசிய வெகுசன அரசியல் பரப்பில் கர்த்தால் போராட்ட செய்முறை. இந்தச் செய்முறையில் துளியளவும் மாற்றத்தைச்செய்யக்கூட யாரும் தயாரில்லை.
இந்தச் செய்முறையின் வயது 75 ஐ கடந்துவிட்டபோதிலும், ஜனநாயக வழிப் போராட்டம்சார் அறிவில் வளர்ச்சியற்ற – சிந்தனை மங்கிய தமிழ்ச் சமூகமும், தமிழ் சமூகத்தை வழிநடத்துகின்ற கட்சிகளும், அமைப்புக்களும் இதனைக் கைவிடாது வைத்திருக்கின்றன.
தேர்தல் காலங்களில் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி வாக்குக் கேட்பதற்கு வேட்பாளர்களைப் பிடிப்பதே சிக்கலானதாக மாறிவரும் ஈழத்தமிழ் சூழலில், வெகுசன போராட்டத்திற்கு ஆட்களைத் திரட்டுவது எப்படி என்பதில் இக்கட்சிகளின் தலைவர்கள் குழம்பிப்போயுள்ளனர்.

அதற்கு விடை காணமுடியாதவர்களாக இருக்கின்றனர். இதனால்தான் ஐந்து பேர் வந்தாலும் சரி, பத்துப் பேர் வந்தாலும் சரி, ஒரு எதிர்ப்பைப் பதிவுசெய்துவிட்டால் போதும், மிகுதியை சர்வதேசம் பார்த்துக்கொள்ளும் என்கிற அளவில் தமிழர்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளுக்கு எதிரான அகிம்சைவழிப் போராட்டங்கள் மங்கிக்கொண்டிருக்கின்றன.
அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகவே முல்லைத்தீவு மாவட்ட நீதவானுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிரான ஜனநாயகவழிப் போராட்டங்கள் மாறியிருக்கின்றன.
காலாவதியான கர்த்தால்
கர்த்தால் – கடையடைப்பு – கறுப்புக்கொடி பறக்கவிடல் போராட்டங்கள் எல்லாம் எப்போதோ காலாவதியாகிவிட்டன.
அரசுக்கு, அரசின் நிர்வாக இயக்கத்துக்கு முடக்கத்தை ஏற்படுத்தி, அதன் பாதிப்பை உணரவைத்தல் என்கிற நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள், இன்று செல்லாக்காசாகிவிட்டன.
கர்த்தால் இடம்பெறும் அதேவேளையில், அந்தப் பிராந்தியத்தில் இருக்கும் அனைத்து அரச நிறுவனங்களும் எவ்வித தடங்கலுமின்றி இயங்கும். அலுவலர்கள் பொறுமையாக இருந்து, அனைத்து மிச்சசொச்ச வேலைகளையும் செய்துமுடிப்பதற்கான நாளாக இதுபோன்ற கர்த்தாலைப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

ஆக, பாதிப்பு எங்கே வருகிறதெனில், பொதுப்போக்குவரத்தில்தான். கர்த்தால் தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இயங்கும் போக்குவரத்தினால் அதிகம் பாதிக்கப்படுவது அரசல்ல.
அன்றாடம் வேலைகளுக்கும், மருத்துவமனைக்கும், இதர தேவைகளுக்கும் பொதுப்போக்குவரத்தை நம்பியிருக்கும் வறியமக்கள்தான்.
அதேபோல கடையடைப்புக்களும், அந்தக் கடையின் வருமானத்தை நம்பியிருக்கும் மக்கள் கூட்டத்தை அதிகம் பாதிக்கிறது. அன்றாடங்காய்ச்சிகளின் அடுப்பில் கர்த்தால் நாள் முழுவதுதே பூனைதான் படுத்திருக்கின்றது.
எனவே தமிழர் தாயகப் பகுதியில் அறிவிக்கப்படும் கர்த்தாலானது, மரமேறி விழுந்தவனை மாடேறி மிதிக்கும் கதையாகவே மாறிவிட்டது.
இந்தநிலைக்கு கட்சிகளே காரணம்
இந்நிலை உருவானமைக்கும் முழுமுதற் காரணமே, கர்த்தால் உள்ளிட்ட அறவழிப் போராட்டங்களை தம் கைக்குள் வைத்திருந்த தமிழ் தேசிய அரசியல் கட்சிகள்தான்.
தமக்கிருக்கும் சிறப்புரிமைகளையும், அழுத்தம் பிரயோகிக்கவேண்டிய சந்தர்ப்பங்களையும் இனநலனுக்காகப் பயன்படுத்தாது விடுகின்றமைதான் கட்சிகள் தொடர்ச்சியாக இழைத்துவரும் தவறாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கிற கட்சிகளின் கூட்டணியானது, 2009 இல் இருந்ததைப்போல பலமாக இருந்து, இலங்கை அரசை சரியாகக் கையாண்டிருப்பின், இன்று தமிழர்கள் எதிர்நோக்கும் அடக்குமுறைகள் பலவற்றைத் தவிர்த்திருக்க முடியும்.
தம் சொந்த நலனுக்காக இனத்தின் நலன்களை அடகுவைத்து, இலங்கை அரசிடமும், இந்தியாவிடமும், வெளிநாட்டுத் தூதரகங்களிடமும் மண்டியிட்டதான் விளைவைத்தான் தமிழர்கள் இன்று எதிர்நோக்குகின்றனர்.
சொத்து சேர்ப்பதற்காகவும், அரசியல் இருப்பிற்காகவும் ஏற்பட்ட அரசியல் போட்டியினால், கட்சிகளின் கூட்டுக்கள் சிதைந்தன. பதவி ஆசையும், பணத்தாசையும் இனநலனுக்கான அரசியலைப் பின்தள்ளின.
இதனால் தமிழ் தேசியத்தின் பின்னால் திரண்டிருந்த மக்கள் கூட்டம் அரசியலை வெறுத்து ஒதுங்கியது. இவ்வாறு ஒதுங்கிய மக்களைத் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் தம் வாக்கு அரசியலுக்காகத் தேர்தல் தொகுதி வாரியாக, பிரதேச வாரியாக, சாதி வாரியாக, சமய வாரியாகப் பிரித்தன.

இனத்தின் பலத்தைக் காட்டுவதிலும் பார்க்க, தன் அரசியல் இருப்பின் பலத்தைக் காட்டுவதே முக்கிய தேவையாக அரசியல் கட்சிகளுக்கு இருந்தமையினால், இந்தப் பிரிப்பை முன்னின்று செய்தன. எனவே மக்கள் சிதறிப்போனார்கள்.
ஈழத்தமிழ் அரசியல் பரப்பின் மெய்ச்சத்தக்க பண்பாக இருந்த அநீதிக்கு எதிரான மக்கள் திரட்சி, மெல்லமெல்லமாக தேய்வடைந்தது.
இந்தத் தேய்வைத் தமிழ் தேசியக் கட்சிகள் முன்னின்று செய்தன. இவற்றை வெற்றிகரமாக செய்துவிட்டு, “போராடுறதுக்கு சனம் வராது. எனவே கர்த்தாலை அறிவிப்பம்” என்கிற – அரசுக்கு நோகாத முடிவுக்கு அரசியல் கட்சிகள் வந்தன. ஆனால் கர்த்தால் மரணித்துப் பல வருடங்கள் ஆகியிருந்தன.
தமிழர்களைப் பிடித்த அவநம்பிக்கை
இவ்வாறு தமக்கு முன்பாகப் பலமானதொரு அரசியல் சக்தி இல்லை என்கிற உணர்வைப் பெற்றத் தமிழர்கள் தம்மைப் பலவீனமானவர்களாக உணரத்தலைப்பட்டனர்.
தங்கள் நலன்களைத் தாண்டி கட்சிகள் வராது என்ற முடிவோடு, அனைத்துப் போராட்டங்களையும் அவநம்பிக்கையோடு பார்த்தனர்.

ஒவ்வொரு தேர்தலிலும் பெருங்கட்டாகக் கட்டி தமிழ் மக்களின் இறைமையை இந்தக் கட்சிகளிடம் கொடுத்தபோதிலும், அதனால் எவ்வித பயனும் கிடைக்கவில்லை என்கிற எண்ணம், அனேக மக்களை மௌனியாக்கியது.
தமிழ் தேசிய அரசியல்சார்ந்து போராடுவது, இன ஒடுக்குமுறைக்கு எதிராகத் திரள்வது போன்றவையெல்லாம் இனியும் தேவையற்றது என்கிற முடிவுக்கு வரச்செய்தது.
புதிய வடிவங்கள் உருவாக்கப்படாமை
வெகுசனப் போராட்டங்கள் புதிய வடிவங்களை எடுக்காமையும் மக்கள் இவற்றிலிருந்து ஒதுங்கிச் சென்றமைக்கான பிரதான காரணங்களில் ஒன்றாகவிருக்கின்றது.
கடந்த காலங்களில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட எத்தனையோ அநீதிகள் ஆவணமாகக் கண்முன் இருப்பினும், அவற்றைப் பயன்படுத்தி புதிய வடிவிலான போராட்டங்களை முன்னெடுக்க தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் தவறிவிட்டன.
ஆகவே எல்லாவிதமான போராட்டங்களும் எந்தப் பிரயோசனமற்று ஒரே அச்சில் சுழல்வதை மக்கள் விளங்கிக்கொண்டனர்.

முடங்குதல் அல்லது திரளுதல், பதாகை தாங்குதல், கோசம் எழுப்புதல், பேரணியாக சென்று மகஜர் கையளி்த்தல் என்பதோடு முடிந்துவிட்டதனால் இதனால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை என்கிற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டனர்.
போராட்ட வடிவங்களை சிருஸ்டிப்பதற்கான யுக்திகளும், இயலுமையும் அற்ற வியாபார நிலையங்களாக கட்சிகள், கட்சிகளின் அலுவலகங்கள் மாறிவிட்டதன் அவலமே இந்தநிலமையாகும்.
அரச பயங்கரவாதம்
தமிழ் மக்கள் இவ்வாறான வெகுசன போராட்டவடிவங்களிலிருந்து விலகிச் செல்வதற்கு, இலங்கை அரசின் பயங்கரவாத முகமும் ஒரு காரணமாகும்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள், ஆட்கடத்தல்கள், காணாமலாக்குதல்கள், சுட்டுக்கொலைகள் என்பன அறவழிப் போராட்டக்காரர்களையும் விட்டுவைக்கவில்லை.
அனைவரையும் பலியெடுத்தது. இப்போதும்கூட அதேநிலை வேறுவேறு வடிவங்களில் உலாவருவதை ஒவ்வொரு போராட்டத்திலும் அவதானிக்க முடியும். புலனாய்வாளர்களும், காவல்துறையினரும் வைத்திருக்கும் கெமராக்கள் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் கருவிகளாக மாறிவிட்டன.

அப்போது போராடியவர்களை வன்முறையால் அச்சுறுத்தி அடக்கிய இலங்கை அரசு, தற்போது போராடுபவர்களை மென்முறைகளால் அச்சுறுத்தி அடக்கிவருகின்றது.
இந்த அச்சவுணர்வானது தமிழ் மக்களை வெகுசனப் போராட்டங்களிலிருந்து விலகிச் செல்ல வைக்கின்றது. இந்த விடயங்களை மதிப்பீடு செய்யவேண்டிய கட்டாயத்தில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் இருக்கின்றன.
புதிய போராட்ட வடிவங்களைக் கண்டறிய வேண்டிய தேவையும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுக்க உண்டு.
இனியும் தாமதித்தால், மக்கள் தேர்தல் அரசியலில் கூட ஆர்வம்காட்டாத நிலை உருவாகும். தமிழ் மக்கள் மத்தியில் விரைவாகப் பரவிவரும் அரசியல் விழிப்புணர்வற்ற சூழல் அதை நோக்கியே கொண்டுசெல்கிறது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Jera அவரால் எழுதப்பட்டு, 13 October, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 5 மணி நேரம் முன்