கோட்டாபயவின் பதவிக்காலம் குறித்த கருத்து பாராதூரமான விளைவை ஏற்படுத்தும்! எச்சரிக்கை மணியடித்த ஜே.வி.பி
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் பதவிக் காலம் இரண்டு வருடங்கள் நீடிக்கப்பட வேண்டும் என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunneththi) தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அரச தலைவரின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தின் போது டயானா கமகே வெளியிட்ட கருத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச வைத்து சோதித்து பார்க்கின்றது.
கடந்த இரண்டு வருடங்களில் பொதுமக்களுக்குச் சேவை செய்ய முடியவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்த கருத்து மூலம் தற்போதைய அரசாங்கம் பொதுமக்களுக்காக பணியாற்றத் தவறிவிட்டது என்பது தெளிவாகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மாணவர்களுக்கான கல்வியை நாசமாக்கியுள்ளது. விவசாயிகளுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியதோடு மரக்கறிகள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.
தற்போதைய அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவோ நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதிலோ வெற்றி பெறாத நிலையில் தற்போது தன்னிச்சையாக அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கிறது என்றும் அவர் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.