கச்சதீவு ஆலய பெருவிழா தொடர்பில் வெளியான அறிவிப்பு
கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.
இன்று(28) யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஊடகங்களுக்கு விடுத்த விசேட அறிவிப்பிலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா
2023ம் ஆண்டுக்கான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாண ஆயர் இல்லம், இலங்கை கடற்படை,நெடுந்தீவு பிரதேசசெயலகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் மார்ச் 03 மற்றும் 04 ஆந் திகதிகளில் நடைபெறவுள்ளது.
பக்தர்களுக்கான உணவு
மேலும், கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான மார்ச் 03 ஆந் திகதிய இரவு உணவு, மார்ச் 04 ஆந் திகதி காலை உணவு மற்றும் மீள் பயணத்திற்கான சிற்றுண்டி என்பன வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன - என்றார்.
முன்னதாக மார்ச் 04 ஆம் திகதி கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான காலை உணவு மாத்திரம் இலங்கை கடற்படையினரால் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட செயலாளரால் அறிவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

