“தமிழரின் எதிரிகள் சிங்களவரல்ல“ - சர்ச்சையை கிளப்பிய இனவாத கருத்து
கிழக்கில் தமிழரின் எதிரிகள் சிங்களவரல்ல முஸ்லிம்களே என்ற நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனின் கருத்தை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.
இவ்வாறாக பேசுவதன் மூலம் இனவாதி கருணாவை பின்பற்றி முஸ்லிம் இனவாதம் பேசி தமிழ் மக்களை உசுப்பேத்தி வாக்குகள் பெற கலையரசனும் முனைகின்றார் எனவும் ஐக்கிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இனவாத கருத்துக்கு கண்டனம்
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கருத்துரைத்தபோது, இவ்வாறு பிழையான இனவாத கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்ட வரலாற்றில் 1960களில் தமிழ், முஸ்லிம் கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. அப்போது இரு தரப்பிலும் பாதிப்பு ஏற்பட்டதுடன் கல்முனையில் ஏற்பட்ட கலவரங்கள் காரணமாக கல்முனைக்குடியில் வாழ்ந்த சுமார் பத்துக்கும் குறைவான தமிழ் குடும்பங்கள் தமது பாதுகாப்புக்காக தமது காணிகளை நல்ல விலைக்கு முஸ்லிம்களுக்கு விற்று விட்டுச் சென்றனர்.
அதைத் தொடர்ந்து 7ஆம் கொலணி, 13ஆம் கொலணி ஆகிய கிராமத்தில் தமிழ் மக்கள் சூழ வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமிழ் இனவாதிகளால் தாக்கப்பட்டு அங்கிருந்து விரட்டப்பட்டனர்.
அவர்களின் வீடுகள், காணிகள் இன்று வரை மீட்கப்படவில்லை.
உண்மை இவ்வாறு இருக்க, அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் தமிழர் காணிகளை பலாத்காரமாக பறிப்பதாக கலையரசன் கூறுவது அப்பட்டமான பொய் என்பதுடன், இது உண்மையாக இருந்திருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொஞ்சிக்குலவிய நல்லாட்சியில் இவற்றை கமிஷன் மூலம் விசாரித்திருக்கலாமே.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களே காணிச்சொந்தக்காரர்களாக இருந்துள்ளனர். சிங்களவர்களால் முஸ்லிம்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் பறிபோன நிலையிலும், முஸ்லிம்கள் தமிழரின் காணியை அடார்த்தாக பிடித்ததில்லை.
இன முரண்பாடு
1970இன் பின் தமிழர், முஸ்லிம்கள் ஒற்றுமையாய் வாழ்ந்த போது 1980களில் தமிழ் ஆயுதக்குழுக்கள் மேற்கொண்ட வழிப்பறிக் கொள்ளை, கப்பம் பறிப்பு, பணத்துக்காக ஆள் கடத்தல் போன்ற காரணங்களால் மீண்டும் இன முரண்பாடு ஏற்பட்டது.
இந்த நிலையிலும் ஒற்றுமையாய் வாழ்ந்த மட்டக்களப்பு, திருகோணமலை முஸ்லிம்களும் தமிழ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
உண்ணிச்சை என்ற கிராமத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாய் கொல்லப்பட்டதுடன் ஏறாவூர், காத்தான்குடி, பொலன்னறுவை என முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டது வரலாறு.
போதாக்குறைக்கு வட மாகாண முஸ்லிம்களின் அனைத்து சொத்துக்களையும் கொள்ளையிடப்பட்ட பின் விரட்டப்பட்டனர்.
இத்தனையும் நடந்து இனியாவது தமிழர் முஸ்லிம்கள் ஒற்றுமையாய் வாழ வேண்டும் என நாமெல்லாம் முயற்சிக்கையில், கடந்த தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட கலையரசன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் தெரியாமல் கள்ளத்தனமாக தேசியப் பட்டியலை பெற்றவர்.
இப்போது கடந்த தேர்தலில் கருணா முஸ்லிம்களுக்கெதிராக இனவாதம் பேசி தமிழ் மக்களின் வாக்குகளை பெற முயன்றது போல் கலையரசனும் இனவாதம் பேசுகிறார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அனைவரும் முஸ்லிம்களுக்கெதிரானவர்கள் என்பதை கிழக்கு முஸ்லிம்களும் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும், அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமும் இனியாவது புரிந்து கொள்வார்களா என்பதும் சந்தேகமே ” - என்றார்.