கொழும்பில் பதற்றம்! காவல்துறையினருடன் முறுகல் - போராட்டக்காரர்கள் பலர் கைது
புதிய இணைப்பு
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டிருந்ததை தொடர்ந்து காவல்துறையினரால் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மாணவர்களின் போராட்டத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் சிலர் ஆதரவை வழங்கி, காவல்துறையினருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவளித்தமைக்காக பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தடுப்பதற்காகவும் மக்களுக்கு ஆதரவாகவும் போராட்டக்காரர்கள் செயற்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கம், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளமை காரணமாகவே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் களனி பல்கலைக்கழத்திற்கு முன்பாக சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
இந்த போராட்டம், கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே உள்ளிட்ட மாணவர் செயற்பாட்டாளர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நீர்த்தாரை கண்ணீர்ப்புகைத் தாக்குதலுக்கு தயார்
போராட்டம் காரணமாக கொழும்பு – கண்டி வீதி களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் மூடப்பட்டுள்ளது.
அதேவேளை, அப்பகுதியில் பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமாவதற்கு முன்னதாகவே காவல்துறையினர் தடை உத்தரவொன்றினை கொண்டு வந்து மாணவர்களிடம் கையளித்த போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இருந்த போதும் போதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த தடை உத்தரவினை ஏற்க மறுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.






