கரு ஜயசூரிய அதிபராவதை தடுத்த சஜித்..! வெளிச்சத்துக்கு வந்த தகவல்
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை அனைத்துக் கட்சி அரசாங்கத்தின் அதிபராக்கும் முயற்சிகளுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தடைக்கல்லாக செயற்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில், கரு ஜயசூரியவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக கரு ஜயசூரிய
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக அவரை நாடாளுமன்றம் கொண்டு வந்து அனைத்துக்கட்சி அரசாங்கமொன்றின் அதிபராக நியமிக்கும் செயற்பாட்டுக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்திருந்ததுடன் சகல தரப்பில் இருந்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதேவேளை, கரு ஜயசூரியவும் அதுகுறித்து தன் சம்மதத்தை வௌியிட்டிருந்தார்.'' பதவிகளை நானாக தேடிப் போக மாட்டேன். ஆனாலும் நாட்டுக்கு சேவையாற்ற சந்தர்ப்பம் கிடைத்தால் ஏற்றுக் கொள்வேன்'' என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
கரு ஜயசூரிய நாடாளுமன்றம் வருவதற்கு வழியேற்படுத்தும் வகையில் மயந்த திசாநாயக்க மற்றும் ஹரீன் பெர்னாண்டோ ஆகிய இருவரும் தங்கள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்தனர்.
சொந்த கனவுக்காக கரு ஜயசூரியவின் மீள் வருகையை தடுத்த சஜித்
இருப்பினும், அவ்வாறு கரு ஜயசூரிய வந்தால் தனது அதிபர் கனவு கைக்கு எட்டாது என்ற நிலைப்பாட்டில் அவர் கருவின் மீள் வருகைக்கு சஜித் பிரேமதாச தடையாக இருந்துள்ளார்.
இந்த அதிருப்தியின் காரணமாகவே ஹரீன் பெர்னாண்டோ மீண்டும் ரணிலுடன் இணைந்து கொண்டதாகவும், மயந்த திசாநாயக்க கட்சியின் இளைஞர் அணி பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை தொடர்பு கொண்ட போது அடிப்படை ஆதாரமற்ற செய்தி என தெரிவித்து அவர் அதனை மறுத்துள்ளார்.