அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு மொஜ்தபா கமேனி விடுத்துள்ள எச்சரிக்கை
அமெரிக்காவுடனான போர் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் இனி பாதுகாப்பானவை அல்ல என்பதை நிரூபித்துள்ளது என்று ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி வெளியிட்ட எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தரப்பிலும், அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலுக்கும் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகள், தெற்கு ஈரானில் அமெரிக்கப் படைகள் தற்காப்புத் தாக்குதல்கள் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்டுள்ளன.
போர் பின்னணி
கமேனி தனது அறிக்கையில், “காலம் பின்னோக்கிச் செல்வதில்லை. இப்பகுதியின் நாடுகளும் நிலங்களும் இனி அமெரிக்கத் தளங்களுக்குக் கேடயங்களாகச் செயல்படாது” என்று வலியுறுத்தினார்.

முஸ்லிம் நாடுகளிடையே அதிக ஒத்துழைப்பை வலியுறுத்தும் வகையில், ஹஜ் யாத்திரையின் தொடக்கத்தை முன்னிட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
பெப்ரவரி மாத இறுதியில் போர் தொடங்கிய முதல் நாளில் அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலில் தனது தந்தையை இழந்த பின்னர் பதவியேற்ற மொஜ்தபா கமேனி, போர் முழுவதும் ஈரான் தரப்பில் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.
போரின்போது அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது குண்டுவீச்சு நடத்தியது.
இதனால் பல அமெரிக்கப் படைவீரர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் அலுவலகங்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று, ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் புதைக்க முயன்ற படகுகள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கத் தரப்பு கூறியது.
“ஈரானியப் படைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து நமது துருப்புக்களைப் பாதுகாப்பதே” இதன் நோக்கம் என்று CENTCOM விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்காவின் முரண்பட்ட சமிக்ஞை
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகம் தற்போதைய நிலைமை குறித்து முரண்பட்ட சமிக்ஞைகளை வெளியிட்டு வருகின்றன.
வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ செவ்வாய்க்கிழமை, “போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. ஒரு ஒப்பந்தம் ஏற்பட சில நாட்கள் ஆகலாம்” என்று தெரிவித்தார்.
இருப்பினும், ட்ரம்ப் மீண்டும் போரைத் தொடங்குவதாக அச்சுறுத்தியுள்ள அதேவேளையில், ஹோர்முஸை மீண்டும் திறப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போரின் ஆரம்ப நாட்களில் ஈரான் இந்த நீரிணையை முற்றுகையிட்டு உலகளாவிய எரிசக்தி சந்தையை சீர்குலைத்திருந்தது.
தற்போதைய நிலைமை, சாத்தியமான அமைதி ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளது.
ஈரானிய அதிகாரிகள் தங்கள் பலமான நிலையை வெளிப்படுத்த முயன்று வரும் நிலையில், பிராந்திய அமைதிக்கான முயற்சிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |