எதிர்வரும் தேர்தல்களில் அரசாங்கத்திற்கு தோல்வி நிச்சயம்! லக்ஷ்மன் கிரியெல்ல உறுதி
தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைவது நிச்சயம் என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் திங்கட்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து ஒரே பொதுப் பட்டியலில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் தோல்வி பயம்
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட லக்ஷ்மன் கிரியெல்ல, “மாகாண சபைத் தேர்தலோ அல்லது உள்ளுராட்சி மன்றத் தேர்தலோ எது நடத்தப்பட்டாலும் அரசாங்கம் அதில் தோல்வியடைவது உறுதியாகும். இந்தத் தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே அரசாங்கம் தேர்தல்களை நடத்தாமல் தொடர்ச்சியாகக் காலத்தைக் கடத்தி வருகிறது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரும் வரை அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் நடத்தப் போவதில்லை என்பதே எனது கணிப்பாகும்.
எதிர்க்கட்சிகளுக்கு இடையே தங்களுக்குள் கருத்து வேறுபாடுகளும் சவால்களும் நிலவிய போதிலும், ஒரு தேர்தல் என்று வரும்போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாகக் கை கோர்க்கும். ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஏற்கனவே சுமுகமான தீர்மானத்திற்கு வந்துள்ளன.
அதற்கமைய, வரவிருக்கும் தேர்தலில் இரு கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் ஒரே பொதுப் பட்டியலில் களமிறக்கப்படுவார்கள். போட்டியிடும் தேர்தல் சின்னம் எது என்பது ஒரு சிறிய விவகாரமே தவிர அது ஒருபோதும் பிளவை ஏற்படுத்தாது.
இரு பிரதான சக்திகளும் ஒன்றிணைவதே இங்கு முதன்மையானது. எனவே, வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள இரு கட்சிகளும் நிச்சயமாக ஒரே அணியாக இணைந்து செயற்படும்” என்றார்.