சாகர காரியவசத்திற்கு ராஜபக்க்ஷர்கள் அழுத்தமா? - வெளிவரவுள்ள அறிவிப்பு
பொதுஜனபெரமுனவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர கரியவசத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் அமெரிக்காவில் இருக்கும் பஷில் ராஜபக்க்ஷ ஆகியோர் உரையாடியுள்ளனர் என தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ந்தும் அந்த செய்தியில்,
குறிப்பாக பொதுஜனபெரமுனவின் பங்காளிக்கட்சித் தலைவரான அமைச்சர் உதய கம்மன்பிலவுடன் ஏற்பட்ட முரண்பாடுகளை தொடர்ந்து அதுபற்றிய கருத்தாடல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அறிய முடிகின்றது.
எனினும், இந்த விடயம் தொடர்பில் சாகர காரியவசம் தெரிவிக்கையில், எமது கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பேசினார்கள் என மட்டும் குறிப்பிட்டார்.
அதற்கு அப்பால் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு அவர் தயாரில்லை என்றும் கூறினார்.
இதேவேளை, தற்போதைய முரண்பாட்டு நிலைமைகள் மற்றும் அடுத்தகட்டமாக எவ்விதமான விடயங்கள் நடைபெறப்போகின்றன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் விரைவில் விசேட அறிவிப்பொன்றை வெளியிடுவேன் என்று அவர் குறிப்பிட்டார்.
அதற்கு உகந்த காலமும் நேரமும் நிச்சயமாக அடுத்துவரும் காலப்பகுதியில் ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.